சென்னை: தமிழ்நாட்டில் இம்மாதம் 27 மற்றும் 30ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று தொடங்கிவிட்ட நிலையில், அந்தத் தேர்தலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டு எதிர்க்கட்சியான திமுக உச்ச நீதிமன்றத்தை நாடி இருக்கிறது.
வார்டு வரையறைப் பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை என்றும் 1991ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து திமுக நேற்று மனுத் தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றாமல் தமிழ்நாட்டின் தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை நடத்துகிறது என்றும் ஆகவே அந்தத் தேர்தலுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளும் அந்த மனு மீதான விசாரணை நாளை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்கள் நீங்கலாக இதர 27 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. இதன் மூலம் 91,975 பதவி இடங்கள் நிரப்பப்படும். முதல்கட்ட தேர்தல் 24,680 வாக்குச் சாவடிகளிலும் இரண்டாம் கட்ட தேர்தல் 25,008 வாக்குச் சாவடிகளிலும் நடக்கிறது. மொத்தம் 2 கோடியே 58 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள்.
ஜனவரி 2ல் வாக்குகள் எண்ணப்பட்டு ஜனவரி 6ஆம் தேதி வென்றவர்கள் பதவி ஏற்பார்கள். அந்தந்த உள்ளாட்சி மன்றத் தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல் ஜனவரி 11ஆம் தேதி நடக்கிறது. பலரும் நேற்று காலை முதலே ஆர்வமுடன் மனுத் தாக்கல் செய்தனர். சேலம் மாவட்டம் குஞ்சாண்டியூரைச் சேர்ந்த பத்மராஜன், 60, என்பவர் கின்னஸில் இடம்பெற வேண்டும் என்பதற்காக வார்டு கவுன்சிலர் பதவி முதல் அதிபர் தேர்தல் வரை வேட்பு மனுத் தாக்கல் செய்துவந்துள்ளார். அவர் நேற்று சேலம் மாவட்டம் மேச்சேரியில் மனுத் தாக்கல் செய்தார். இந்தத் தேர்தல் அவர் சந்திக்கும் 209வது தேர்தல் ஆகும். இதனிடையே, எந்த ஊரில் எந்தத் தேதியில் தேர்தல் நடக்கும் என்ற அட்டவணையை நேற்று தேர்தல் ஆணையம் வெளியிட்டது.