சென்னை: தமிழகம் உள்ளாட்சித் தேர்தலுக்காக தீவிரமாகத் தயாராகி வருகிறது.
பெண்கள் ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல, பெண்களுக்கு எதிலும் சம உரிமை என பேச்சளவில் கூறப்பட்டு வந்த வார்த்தைகள் இன்று நடைமுறைக்கு வரும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது மாநிலத் தேர்தல் ஆணையம்.
இந்த ஆண்டு நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் போட்டியிட 50% வாய்ப்புகளை நடை முறைப்படுத்தியுள்ளது ஆணையம்.
கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்து வந்த தேர்தல் எதிர்வரும் டிசம்பர் 27, 30 தேதிகளில் நடைபெறவுள்ளது.
இதுவரை தேர்தல் இட ஒதுக்கீடு என்றால் பெண்களுக்கு 33%தான் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால் வரவேற்கத்தக்க அம்சமாக பார்க்கப்படுகிறது. ஆனால், கட்சி ரீதியாக வேட்பாளர்கள் கிடைப்பதில் சிரமம் உள்ளதாக அரசியல் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் இந்த இட ஒதுக்கீட்டு முறையால் சில கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் தங்கள் சொந்த வார்டுகளில் போட்டியிட முடியாத நிலையும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த இட ஒதுக்கீட்டு முறை மூலம் அடுத்தடுத்த தேர்தல்களில் பெண்களின் ஈடுபாடு அதிகரிக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே அதிகரித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலுக்காக தீவிரமாகத் தயாராகி வருகின்றன.
திமுக சார்பாக இந்த தேர்தலுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில், புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் ஆயிரக்கணக்கில் வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன.
வரும் 16ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள். வேட்புமனுக்களைத் திரும்பப் பெற 19ஆம் தேதி கடைசி நாளாகும்.
அடுத்த ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 3,217 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன.
இதற்கிடையே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அமமுக முடிவெடுத்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு பொது சின்னமாக ஒரே சின்னத்தை ஒதுக்கவேண்டும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமியிடம் அமமுக கட்சி முறையிட்டுள்ளது.