வெங்காயத்தைp பதுக்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழக பொது விநியோக சிஐடி பிரிவின் தலைவர் டிஐஜி பிரதீப் வி பிலிப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெங்காயம் பதுக்கிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதையடுத்து வெங்காயத்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்நிலையில், வியாபாரிகள் பலர் வெங்காயத்தைப் பதுக்கி வைப்பதாக ஏராளமான புகார்கள் எழுந்ததையடுத்து, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
பதுக்கல் வெங்காயத்தைக் கண்டுபிடிக்க 33 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கடந்த இரு தினங்களில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டதாகவும் டிஐஜி பிரதீப் வி பிலிப் தெரிவித்துள்ளார்.
“வியாபாரிகள் தங்கள் கிடங்கில் வைத்திருக்கும் வெங்காயத்துக்கு உரிய ரசீது வைத்திருக்க வேண்டும். வெங்காயம் பதுக்கினால் அந்த வியாபாரிகள் மீது வழக்கு தொடரப்படும்.
“வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும். தண்டனை பெற்ற வியாபாரிகளின் கடை உரிமம் ரத்து செய்யப்படும்,” என்றும் பிரதீப் வி பிலிப் மேலும் கூறியுள்ளார்.
இதற்கிடையே வேலூர் சந்தையில் நேற்று முன்தினம் வெங்காயத்தின் விலை திடீரென குறைந்தது. அங்கு 4 கிலோ வெங்காயம் நூறு ரூபாய்க்கு விற்கப்பட்டது. எனினும் சென்னையில் விலை குறையவில்லை எனக் கூறப்படுகிறது.
வெங்காய தட்டுப்பாட்டைச் சமாளிக்க மத்திய அரசு எகிப்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதை இறக்குமதி செய்கிறது.
இந்நிலையில், எகிப்து வெங்காயம், கெட்ட கொழுப்பை எளிதில் கரைப்பதுடன், அதிக வீரியத்தன்மை உடையது என ஊட்டசத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பாலைவனப்பகுதியை ஒட்டி விளைவதால் எகிப்து வெங்காயம் அதிக அமிலத்தன்மையும் காரத்தன்மையும் கொண்டதாக இருக்கும் என்றும், அவற்றில் வைட்டமின் சி, பி ஆகியவை அதிகம் இருக்கும் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity