சென்னை: தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலுக்குத் தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன.
அந்த மனுக்கள் மீதான விசாரணையின் முடிவில் தலைமை நீதிபதி பாப்டேவை உள்ளடக்கிய அமர்வு மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தது.
1991 கணக்கெடுப்பின் படி உள்ளாட்சித் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்திருந்த நிலையில், தற்போது 2011 கணக்கெடுப்பின்படி நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழக அரசியல் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சொத்துப் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் அரசியல் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சி நிலவுவதாக தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 27 மற்றும் 30ஆம் தேதிகளில் தமிழக உள்ளாட்சித் தேர்தல் இரு கட்டங்களாக நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 16ஆம் தேதி வரை நடைபெறும்.
இந்நிலையில், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் நடைமுறையில் இருப்பது போன்று வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்யும்போது, அதனுடன் தங்களுடைய பெயரிலும், குடும்பத்தினர் பெயரிலும் உள்ள சொத்துகள் அடங்கியபட்டியலைத் தாக்கல் செய்ய வேண்டும் என மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளாரா்.
சொத்துப் பட்டியலைத் தாக்கல் செய்யத் தவறினால் வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.