நாகை: தமிழ்நாட்டில் புதிதாக அமையவிருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் ஒரு கல்லூரி நாகை அருகே அமைக்கப்படும் என்றும் அதற்கு மத்திய அரசு அனுமதி அளித்து இருப்பதாகவும் அண்மையில் அறிவிப்பு வெளியானது.
ஆனால் அந்தக் கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க வேண்டும் என்று அந்த வட்டார மக்கள் பல போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மயிலாடுதுறை தனி மாவட்டமாக ஆவதற்குப் பல தகுதிகள் இருந்தும் இன்னமும் அது நாகை மாவட்டத்தின் பகுதியாகவே இருக்கிறது என்று கவலை தெரிவிக்கும் அந்த வட்டாரவாசிகள், நாகைக்கு அருகே திருவாரூர், தஞ்சாவூர் போன்ற இடங்களில் மருத்துவக் கல்லூரிகள் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.
மருத்துவக் கல்லூரிக்கு இலவசமாக நிலம் வழங்க பலர் முன் வந்தும் மயிலாடுதுறையில் அந்தக் கல்லூரியை அமைக்க தயக்கம் காட்டக்கூடாது என்று கூறும் அவர்கள், இதன் தொடர்பில் முதலமைச்சரைச் சந்திக்க முடிவு செய்து இருக்கிறார்கள்.
இந்நிலையில், மருத்துவக் கல்லூரிப் பணிகள் விரைவாகத் தொடங்க வேண்டும் என்று கேட்டு நாகை வட்டாரவாசிகள் கடையடைப்பு, வேலை நிறுத்தப் போராட்டங்கள் போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தப் போராட்டத்தில் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் சேர்ந்துகொண்டுள்ளனர்.