திருச்சி: தமிழ்நாட்டில் அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், கிராம மக்கள் ஆகியோரைக் குறிவைத்து அரங்கேற்றப்பட்டு இருக்கும் கோடானகோடி மின்னிலக்க நாணய மோசடி அம்பலமாகி இருக்கிறது.
இதன் தொடர்பில் இதுவரை திருச்சியில் ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டு இருக்கிறார்கள். மேலும் ஆறு பேரை போலிஸ் தேடுகிறது. இந்த மோசடியில் ரூ.526 கோடிக்கும் அதிக தொகை ஏமாற்றப்பட்டு இருக்கிறது என்று போலிஸ் நம்புகிறது.
இந்த விவகாரம் கோடானகோடி ரூபாய் தொடர்புடையது என்பதால் இது பொருளியல் குற்றப் பிரிவுக்கு மாற்றிவிடப்படும் என்று போலிஸ் துறை விளக்கியது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகேயுள்ள சங்கம்பட்டியைச் சேர்ந்த முருகேசன், 30, என்பவர் போலிசிடம் அளித்த புகார் மூலம் இந்தப் பெரும் மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.
கார்த்திக், 38, என்பவர் கடந்த ஜூன் மாதம் முருகேசனை அணுகி மின்னிலக்க நாணய (பிட் காயின்) பல நிலை இணைய வர்த்தகத் திட்டம் என்ற ஒரு திட்டத்தைப் பற்றி எடுத்துக் கூறினார்.
திருச்சி ரயில் சந்திப்பு நிலைய பகுதியில் ‘பிட் 2 பிடிசி, ஸ்டாக்கிஸ்ட் மார்ட்’ என்ற பெயரில் செயல்படும் நிறுவனத்தில் ரூ.700 (10 டாலர்) முதலீடு செய்தால் நாள் ஒன்றுக்கு ரூ. 50 வரை ஈட்டலாம் என்றும் இதில் பலரையும் சேர்த்துவிட்டால் பெரும் பணம் பார்க்கலாம் என்றும் கார்த்திக் கூறியதை அடுத்து அவர் மூலம் முருகேசன் பல தவணைகளாக ரூ.36.40 லட்சம் செலுத்தினார்.
ஆனால் முருகேசனுக்கு ரூ.5.25 லட்சம் மட்டுமே கிடைத்தது. இதைக் கண்டு ஏமாற்றம் அடைந்த முருகேசன் திருச்சி போலிசில் புகார் செய்தார்.
முருகேசன் தாக்கல் செய்த புகார்கள் உண்மையானவை என்பது தெரியவந்தது.
அதையடுத்து கார்த்திக், ரமேஷ், குட்டிமணி, கணேசன், தங்கராஜ் ஆகிய ஐவரை போலிஸ் கைது செய்தது. இதர ஆறு பேர் தேடப்பட்டு வருகிறார்கள்.
இந்தக் கும்பல் மோசடி செய்துள்ள தொகை ரூ. 526 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம் என்று போலிஸ் நம்புகிறது.
இதில் தரகராகச் செயல்பட்டு இருக்கும் குட்டிமணி என்பவரின் வங்கிக் கணக்கில் மட்டும் ரூ. 80 லட்சம் இருந்ததைக் கண்டு அந்தக் கணக்கை போலிஸ் முடக்கிவிட்டது. மற்றவர்களின் கணக்குகளும் முடக்கப்பட்டு வருகின்றன.
இந்த மோசடியில் ஆசிரியர்கள், கிராம மக்கள், அரசு ஊழியர்களே பெரும்பாலும் சிக்கி இருக்கிறார்கள் என்று விளக்கம் அளித்துள்ள போலிஸ், தாங்கள் தீவிர வேட்டையைத் தொடங்கி இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.
இந்த மோசடியில் ரொக்கம் புழங்க வில்லை என்றும் இணையம் வழி பணத்தை மாற்றிவிட்டதின் வழியில் பெரும் பணம் இதில் புழங்கி இருக்கிறது என்றும் போலிசார் தெரிவிக்கிறார்கள்.
அரசிடம் முறையாகப் பதியாமல் நடத்தப்படுகின்ற நிதி, வர்த்தக நிறுவனங்களில் யாரும் முதலீடு செய்ய வேண்டாம் என்று பொதுமக்களுக்கு போலிஸ் ஆலோசனை கூறி உள்ளது.