சென்னை: சென்னை மாநகராட்சியில் ரூ. 1,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகவும் குற்றவாளிகளைப் பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றில் பரபரப்பைக் கிளப்பி இருக்கிறார்.
சென்னையில் மழைநீர்க் கால்வாய், நடைபாதை திட்டங்கள், அறிவார்ந்த நகர் திட்டம், உலக வங்கி நிதியுதவி திட்டங்கள் ஆகியவற்றை நிறைவேற்ற மாநகராட்சி ஒப்பந்தம் கொடுக்கிறது. அந்தத் திட்டங்கள் தொடர்பான கட்டுமானப் பணிகளில் ஆற்று மணல் பயன்
படுத்தப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஆனால் ஆற்று மணலுக்குப் பதிலாக எம்-சாண்ட் எனப்படும் கல் மணல்தான் பயன்படுத்தப்படுகிறது என்பது சென்னையில் உள்ள ஹார்லிஸ் ரோடு நடைபாதை ஆய்வு மூலம் தெரியவந்து இருப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார்.
ஆற்று மணலைவிட கல் மணல் பாதிக்குப் பாதி விலை குறைவு என்பதை அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார். இது ஒருபுறம் இருக்க, கான்கிரீட் கட்டுமானங்களில் பயன்படுத்தப்படும் பொருளின் விலை 30 விழுக்காடு வரை அதிகமாக ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது என்பது தெரிய வந்துள்ளதாகவும் திமுக தலைவர் குறிப்பிட்டு உள்ளார்.
சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் இத்தகைய ஊழல் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், ஆனால் விசாரணை நடந்ததாகத் தெரியவில்லை என்று
தெரிவித்தார்.
ஊழல் அதிகாரிகள் ஓய்வு பெற்றுவிட்டாலும் சட்டத்தின் பிடியில் இருந்து அவர்கள் தப்ப முடியாது என்று சவால்விட்ட ஸ்டாலின், ஊழல் தடுப்புத் துறை உடனடியாக களத்தில் இறங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.