புதுடெல்லி: அனைத்துலக போதைப் பொருள் கடத்தல் கும்பல் ஒன்று டெல்லியில் சிக்கியுள்ளது.
அந்தக் கும்பலிடமிருந்து 1,300 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.
தேசிய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் இணைந்து இந்நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
தலைநகர் டெல்லியிலும் மற்றும் சுற்றியுள்ள மண்டல பகுதிகளிலும் அதிகஅளவில் போதைப் பொருட்கள் புழக்கத்தில் உள்ளதாகவும் அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அனைத்துலக போதைப் பொருள் கடத்தல் கும்பல் செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாயின.
பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்தும் செயல்களில் அமெரிக்கா, இந்தோனீசியா, நைஜீரியா போன்ற நாடுகளைச் சேர்ந்தோர் ஈடுபட்டு வருவதாகவும் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு துப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் இணைந்து பல இடங்களிலும் தீவிர சோதனை நடத்தினர்.
இதில், போதைப்பொருள் கடத்தல் கும்பல் பதுக்கி வைத்திருந்த 20 கிலோ கொக்கைன், 200 கிலோ மெத்தம்பெடமைன் போதைப்
பொருட்களை அவர்கள் பறிமுதல் செய்தனர்.
இந்தியாவில் ரூ.100 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களும் ஆஸ்திரேலியாவில் ரூ.200 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவைமட்டுமின்றி வேறு சில நாடுகளிலும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.1,300 கோடி.
இது தொடர்பாக ஐந்து இந்தியர்கள், இரு நைஜீரியர்கள், அமெரிக்கா மற்றும் இந்தோனீசியா நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.