சென்னை: இந்தியாவிலேயே முதன்முறையாக, மறுபயன்பாட்டுக்கு உகந்த திடக்கழிவுகளை வாங்கவும் விற்கவும் ஏதுவாக புதிய இணையத்தள சேவையை சென்னை மாநகராட்சி தொடங்கி உள்ளது.
காய்ந்த, ஈரமான திடக்கழிவுகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பள்ளிப் பைகள், செருப்புகள், மண்புழு உரம், எரு, தேங்காய் நார்த் தூள், எலுமிச்சை பாத்திரம் துலக்கி எனப் பல்வேறு பொருட்களை ‘www.madraswasteexchange.com’ என்ற இந்தப் புதிய இணையத்தளத்தின் மூலம் பெறமுடியும்.
இதற்கென சென்னை மாநகர் முழுவதும் 210 இடங்களில் வள மீட்பு முனையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு இந்த மறுபயன்பாட்டுப் பொருட்களைக் கட்டுப்படியான விலையில் பொதுமக்கள் வாங்கிக் கொள்ளலாம்.
திடக்கழிவுகளை விற்க விரும்புவோர் தங்கள் பகுதிகளில் இருக்கும் வள மீட்பு முனையங்களுக்குச் சென்று, அங்கு விட்டுச் செல்லலாம். அம்முனையங்களில் இருக்கும் பொருட்களை வாங்க விரும்புவோர், இணையத்தளம் வாயிலாக அவற்றைத் தெரிவு செய்து, கடன் அட்டை அல்லது பற்றட்டை மூலமாக உரிய பணத்தைச் செலுத்தி, பொருட்களை வாங்கிச் செல்லலாம்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு 5,220 டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. அவற்றில் 2,610 டன் ஈர திடக்கழிவுகள் பல்வேறு வழிகளில் மறுசுழற்சி செய்யப்படுகின்றன.
முன்னதாக, இவ்வாறு மறுசுழற்சி மூலம் உரமானது ஒரு கிலோ பத்து ரூபாய் என்ற விலையில் உள்ளூர்வாசிகளுக்கு விற்கப்பட்டு வந்தது.
திடக்கழிவுகளை வாங்கி, விற்கும் சேவை வழங்கும் புதிய இணையத்தளம் நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், “இந்த இணையத்தளம் வாயிலாக திடக்கழிவுகளை வாங்கவும் விற்கவும் முடியும் என்பதால் அதிகமான மக்களைச் சென்றடைய முடியும் என நம்புகிறோம்,” என்றார்.
‘அறிவார்ந்த நகரம்’ இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்த இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்போதைக்கு, சென்னை மாநகராட்சியானது திடக்கழிவுகளை விற்க மட்டுமே செய்கிறது.
“முதற்கட்டமாக, முன்னோடி முயற்சியாக மூன்று மாதங்களுக்கு இந்த இணையத்தளம் இயங்கும். மக்கள் அளிக்கும் ஆதரவைப் பொறுத்து, மின்கழிவுகள் பரிமாற்ற வசதி போன்ற வேறு பல வசதிகளும் இந்த இணையத் தளத்தில் சேர்க்கப்படும்,” என்று திரு பிரகாஷ் சொன்னார்.
அத்துடன், இதே பெயரில் விரைவில் ஒரு திறன்பேசி செயலியும் தொடங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், குப்பை நிரப்பும் இடங் களுக்குச் செல்லும் திடக்கழிவின் அளவைக் குறைக்கும் நோக்கில் தனியார்-பொதுத் துறை பங்களிப்பில் மூன்று எரியூட்டு ஆலைகளை அமைக்கவும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.