சென்னை: மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் மட்டம் போட்டுவிட்டு, வெட்டியாகப் பொழுதைக் கழிப்பதைத் தடுப்பதற்குத் தமிழக அரசு புதிய நடைமுறையைக் கொண்டு வரவுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் விடுப்பு எடுத்தால் உடனடியாக அது குறித்து அவர்களின் பெற்றோருக்குக் குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பப்பட்டுவிடும். 2020 ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து இந்த வசதி நடைமுறைப்படுத்தப்படும்.
சென்னை போரூர் அரசுப் பள்ளி உள்ளிட்ட சில பள்ளிகளில் இந்த முயற்சி சோதித்துப் பார்க்கப்பட்டது. தங்களுக்குத் தெரியாமல் தங்களின் பிள்ளைகள் விடுப்பு எடுக்க முடியாது என்பதாலும் அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகிறது என்பதாலும் பெற்றோர்கள் மத்தியில் இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து, இந்த நடைமுறை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளது.