சென்னை: தமிழ்நாட்டில் இம்மாதம் 27 மற்றும் 30ஆம் தேதிகளில் நடக்கும் ஊரக, உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட விரும்புவதாகக் கூறி நேற்று முன்தினம் வரை மொத்தம் 1.09 லட்சம் பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்து இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
வேட்புமனுத் தாக்கல் செய்ய நாளை வரை அவகாசம் இருப்பதால் இந்த எண்ணிக்கை இன்னும் கூடு மென எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் 2011க்குப் பிறகு இப்போது நடக்கின்ற உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சி வேட்பாளர்களும் சுயேச்சைகளும் மிகவும் விருப்பத்துடன் வேட்புமனுத் தாக்கல் செய்து வருவதாகத் தெரியவந்துள்ளது.
வேட்புமனுத் தாக்கல் இம்மாதம் 9ஆம் தேதி தொடங்கியது. மனுத் தாக்கல் செய்துள்ள மொத்தம் 1 லட்சத்து 9 ஆயிரத்து 778 பேரில் 75,170 பேர் கிராம, ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியைப் பெற விரும்புகிறார்கள். கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு 26,245 பேர் மனுத் தாக்கல் செய்து இருக்கிறார்கள்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் 1996ல் முழுமையாக நடந்தது. பிறகு 2001, 2006, 2011 ஆம் ஆண்டுகளில் அந்தத் தேர்தல் முறையாக நடந்தது. 2016ல் நடக்க வேண்டிய தேர்தல் இப்போதுதான் நடத்தப்படுகிறது.
என்றாலும் புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களைத் தவிர எஞ்சிய மாவட்டங்களுக்குத்தான் தேர்தல் நடத்தவேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இவ்வேளையில், இத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்குப் பொதுச் சின்னமாக கரும்பு விவசாயி சின்னத்தை மாநில தேர்தல் ஆணையம் ஒதுக்கி இருக்கிறது.
உள்ளாட்சித் தேர்தலைக் கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகள் பல வியூகங்களை வகுத்து வருகின்றன.
ஆளும் அதிமுவும் முக்கிய எதிர்க்கட்சியான திமுகவும் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளை மும்முரமாக நடத்தி முடித்து அவற்றின் விவரங்களை வெளியிட்டு வருகின்றன. உள்ளாட்சித் தேர்தலையொட்டி முதல் கட்சியாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தங்களது கட்சித் தொண்டர்களை அதிமுக தலைமை ஊக்கமூட்டியது.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டி யிடும் திமுக வேட்பாளர்களின் முதல் பட்டியல் நேற்று வெளியிடப் பட்டது.
இந்தப் பரபரப்புகளுக்கு இடையே, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள நாராயணபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட நரசிங்கம்பட்டி கிராம மக்கள், வாக்காளர் பட்டியலில் தங்கள் கிராமத்தையே காணவில்லை என்று சொல்லி தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக கறுப்புக் கொடி கட்டி தொடர்ந்து போராட்டம் நடத்தி கவனத்தை ஈர்த்து வருகிறார்கள்.