சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் ஆளும் கட்சியான அதிமுக 10 மாவட்டங்களுக்கான தனது 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
தேனி, சேலம், கிருஷ்ணகிரி, உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கான மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான அதிமுக வேட்பாளர்களின் முதல் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
இதையடுத்து, இப்போது திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், தஞ்சை, நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி தெற்கு ஆகிய 10 மாவட்டங்களுக்கான வேட்பாளர் களின் 2வது பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்டங் களைத் தவிர்த்து இரு கட்டங்களாக வரும் 27, 30ஆம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படு கிறது. ஜனவரி 2ல் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இன்று (திங்கட்கிழமை) வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய இறுதி நாள் என்பதால் அரசியல் கட்சியினர் பலரும் போட்டிபோட்டுக் கொண்டு வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்து வருகின்றனர்.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் பட்டியல் அந்தந்த மாவட்டங்கள் வாரியாக வெளியிடப்பட்டு உள்ள நிலையில், இன்று திங்கட்கிழமை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய உள்ளனர்.
திமுக சார்பிலும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உரிய இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “அதிமுக அரசு மாநில தேர்தல் ஆணையத்துடன் சூழ்ச்சி கரமான கூட்டணி அமைத்துக்கொண்டு முறைகேடுகளுக்கு வழி வகுத்தாலும் மக்களின் பேராதரவு திமுகவிற்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமே இருக்கிறது.
“அள்ளித் தெளித்த அவசரக் கோலத்தில் தேர்தலை நடத்தத் துடிக்கும் அதிமுக அரசுக்கு தக்க பாடம் புகட்டிட தமிழ்நாட்டு மக்கள் தயாராக உள்ளனர். எத்தனை கட்டமாக தேர்தலை நடத்தினாலும் அத்தனை கட்டத்திலும் அதிமுக அடையப்போவது தோல்விதான்; தோல்வி யைத் தவிர வேறல்ல.
“திமுகவின் தொண்டர்களையும் தோழமைக் கட்சியினரையும் ஒருங்கிணைத்து ஒவ்வொரு வாக்காளரின் உறுதியான நம்பிக்கையையும் பெற்றிடும் வகையில் கண்ணும் கருத்துமாக உழைத்திட்டால்தான் வெற்றி நம் கைகளுக்கு வரும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.