பல்லடம்: 'ஒரு வாக்காளர் தேர்தலில் செலுத்தும் வாக்குகளின் மதிப்பு பன்றியின் விலையைவிட குறைவு' என்று குறிப்பிட்டு, பல்லடம் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
'தேர்தலில் வாக்குகளை விற்போர் மற்றும் வாங்குவோர் கவனத்திற்கு' என்று தலைப்பிட்டு கரைப்புதூர் மக்கள் மன்றம் சார்பில் இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன.
"எருமை மாடு 50 ஆயிரம் ரூபாய், பசு மாடு 40 ஆயிரம் ரூபாய், ஆடு 10 ஆயிரம் ரூபாய், நாய் 25 ஆயிரம் ரூபாய், பன்றி 3 ஆயிரம் ரூபாய்.
"ஆனால், தேர்தலில் வாக்களிக்கும் மக்களின் விலை 500 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை தான் உள்ளது. இது பன்றியின் விலையை விடக்குறைவு. சிந்தித்து பணம் பெறாமல், தன்மானத்துடன் வாக்களியுங்கள்," என்று அந்தச் சுவரொட்டியில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தற்போது சுவரொட்டி விவகாரம் அப்பகுதியில் புதிய விவாதப் பொருளாகியுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இப்படியொரு சுவரொட்டி ஒட்டப்பட்டிருப்பது அரசியல் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

