சென்னை: குடியுரிமை விவகாரத்தில் நல்ல தீர்வு காணப்படும் வரை தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெறும் என எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்றுப் பேசிய அக்கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன், தமிழகத்தில் மக்கள் நலன் சார்ந்த விஷயங்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தக் கூட அனுமதி கிடைப்பதில்லை என்றார்.
“தற்போது நடைபெறுவது மோடி ஆட்சி அல்ல, ஹிட்லரின் ஆட்சி. ஹிட்லருக்கு ஏற்பட்ட முடிவு மோடிக்கும் ஏற்படக் கூடாது என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் மோடியின் ஆட்சி நடைபெற்று வருகிறது,” என்றார் முத்தரசன்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசுகையில், பாஜக ஆட்சிக்கு வந்த சிறிது காலத்திலே இஸ்லாமியர்களுக்கு எதிரான செயல்களை செய்யத் தொடங்கிவிட்டதாகச் சாடினார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் வெளிப்படையாக இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளது என்றும், இதை எந்தச் சூழ்நிலையிலும் ஏற்க இயலாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், அனைவரும் ஒன்றிணைந்து வாக்களித்திருந்தால் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நிறைவேறி இருக்காது என்றார்.
“வரலாற்றின் உண்மைகளை மறைத்து வைக்கவும் முடியாது, திருத்தி வைக்கவும் முடியாது. அமித்ஷா என்னை பற்றி முழுமையாக அறியாதவர்,” என்றார் வைகோ.
இதற்கிடையே, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சில உயரதிகாரிகள், மத்திய பாஜக அரசின் முகவர்களாகச் செயல்பட்டு வருவதாக திமுக பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.