சேலம்: கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு 90 வயது மூதாட்டி மனுத்தாக்கல் செய்திருப்பது சேலம் மாவட்ட மக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
ஆட்டையாம் பட்டியை அடுத்துள்ள முருங்கபட்டியைச் சேர்ந்தவர் கனகவல்லி (படம்). இவர் கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து நேற்று முன்தினம் தனது உறவினர்கள் பலரது துணையோடு வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து தனது வேட்பு மனுவை அவர் தாக்கல் செய்தார்.
இம்மூதாட்டி ஏற்கெனவே கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை ஊராட்சித் தலைவராகப் பொறுப்பு வகித்துள்ளார்.
இவரது கணவர் அழகேசபூபதி, மகன் பார்த்தசாரதி ஆகியோரும் தலா 20 ஆண்டுகள் ஊராட்சித் தலைவராக இருந்துள்ளனர்.
“ஒட்டுமொத்த குடும்பமும் கிராம வளர்ச்சிக்காகப் பாடுபட்டுள்ளது. அடிப்படை வசதிகளைப் பெற்றுத் தந்துள்ளோம். அதனால் மக்களுக்கு எங்கள் குடும்பத்தின் மீது மிகுந்த அபிமானம் உள்ளது. அவர்கள்தான் சொந்தச் செலவில் எங்களை தேர்தலில் போட்டியிட வைத்து தேர்வும் செய்கிறார்கள்,” என்கிறார் கனகவல்லி.