சென்னை: தமிழ்நாட்டில் வண்ண வண்ண கோலங்களுக்குப் புகழ்பெற்ற இந்த மார்கழி மாதத்தில், மாநிலத்தின் பல பகுதிகளிலும் கோலங்களுக்கு அரசியல் சாயம் பூசப்படுகிறது.
இந்திய அரசாங்கம் அண்மையில் நிறைவேற்றிய புதிய குடியுரிமை சட்டத் திருத்தத்தையும் புதிய தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் எதிர்க்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களுடைய எதிர்ப்பைக் கோலம் மூலம் காட்டும் பாணி விரிவடைந்து வருகிறது.
சென்னையில் புதிய குடியுரிமைச் சட்டமும் குடிமக்கள் பதிவேடும் வேண்டாம் என்று கூறி கோலமிட்ட ஐந்து பெண்கள் உள்ளிட்ட எட்டு இளைஞர்களை போலிசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கோலம் மூலம் எதிர்ப்பை வெளிப்படுத்தும் போக்கு அதிகரித்து வருவதாகத் தெரிகிறது.
காலையிலும் மாலையிலும் வீடுகளுக்கு வெளியே வண்ண வண்ண கோலமிட்டு எதிர்ப்புகளை வெளிப்பபடுத்தி மாக்கோலத்தைப் போர்க் கோலம் ஆக்கும்படி திமுக தலைவர் ஸ்டாலின், கட்சியின் மகளிர் பிரிவுக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் அந்த உத்தரவை ஏற்று தாங்கள் அரசியல் கோலம் போட்டு வருவதாகவும் அக்கட்சிப் பெண்கள் சிலர் கூறினர்.
திமுக தலைவர் ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, முன்னாள் தலைவர் கருணாநிதி ஆகியோரின் வீடுகளுக்கு வெளியே நேற்று அரசியல் கோலம் போடப்பட்டு இருந்தது.
மதுரையிலும் இதர பல பகுதிகளிலும் பல வீடுகளுக்கு வெளியே இத்தகைய அரசியல் கோலங்களைக் காண முடிந்ததாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன.
“எங்கள் தலைவர் உத்தரவிட்டு இருக்கிறார். நாங்கள் தொடர்ந்து இத்தகைய கோலங்களைப் போடுவோம்,” என்று திமுக தலைவி ஒருவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் பனி பொழியும் மார்கழி மாதம் கோலத்திற்கு மிகவும் புகழ்பெற்ற மாதமாகும்.
இந்த மாதம் முழுவதும் மாதர்கள் தங்கள் வீட்டின் வெளி, உட்பகுதிகளைச் சுத்தப்படுத்தி, வண்ண வண்ண கோலங்களைத் தீட்டி அவற்றில் பரங்கிப்பூ முதலானவற்றை வைத்து அழகு பார்த்து மகிழ்வார்கள். இப்போது அதிலும் அரசியல் நுழைந்துள்ளது.