சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் செயல்பட்டு வரும் தனியார் விளையாட்டுப் பூங்காவில் உள்ள ராட்சத ராட்டினத்தில் ஒரு சிறுமியின் தலை சிக்கிக் கொண்டது.
அந்தச் சிறுமியின் தலையை விடுவிக்கும் பணியில் ஈடுபடாமல் அங்கிருந்து ஓடிய ராட்டின ஆபரேட்டரை போலிசார் தேடி வருகின்றனர்.
அந்தக் குறிப்பிட்ட பூங்காவில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு சென்ற கேரள சிறுமி சல்மா, ராட்சத ராட்டினத்தில் ஏறியுள்ளார்.
ராட்டினம் சுற்றத் தொடங்கியபோது எதிர்பாராத விதமாக அவரது தலை பக்கவாட்டு கம்பிகளுக்கு இடையே சிக்கிக்கொண்டது.
அதனைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டதால் பதற்றமடைந்த ராட்டினத்தின் ஆபரேட்டர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி சிறுமியைப் பத்திரமாக மீட்டனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சாஸ்திரி நகர் போலிசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
விளையாட்டு பூங்காவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்படவில்லை என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் குறிப்பிட்டனர்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity