நடிகர் ரஜினியின் பதாகைகளுக்கு பாலபிஷேகம் செய்வது, மண் சோறு சாப்பிடுவது போன்ற செயல்களில் ஈடுபடும் ரசிகர்களுக்கிடையே வித்தியாசப்படுகிறார் மாதவன்.
தாம் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்று குறிப்பிடும் அவர், மதுரை மாவட்டம் மேலூர் பழைய சுக்காம்பட்டியைச் சேர்ந்தவர்.
புதிதாக ரஜினியின் திரைப்படம் வெளியாகும்போது ஏழை, எளிய மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வாங்கிக் கொடுப்பதாகக் கூறும் அவர், பல்வேறு சமூகப் பணிகளையும் செய்துவருகிறார்.
“அவரிடம் நான் பெரிதும் ரசித்தது அவரின் எளிமையையும் சண்டைக் காட்சிகளையும்தான். சினிமா டிக்கெட் விலை 45 பைசாவாக இருந்த காலந்தொட்டு ரஜினியின் திரைப்படங்களைப் பார்த்து வருகிறேன். `பைரவி’ படம்தான் என்னை அவரின் தீவிர ரசிகனாக மாற்றியது,” என்கிறார் மாதவன்.
“அவ்வளவுதானா?” என்றால் இல்லை. மற்ற ரசிகர்களைவிட ஒரு படி மேலே சென்று தனது நான்கு மகன்களுக்கும் ரஜினிகாந்த் நடித்த படங்களின் பெயர்களை வைத்திருக்கிறார்.
மூத்த மகன் பெயர் மன்னன் @ மோக மன்னன், இரண்டாவது மகனின் பெயர் முத்து, மூன்றாவது மகனின் பெயர் படையப்பா, நான்காவது மகனின் பெயர் பாபா.
“எனக்குக் கட்சியோ, பதவியோ தேவையில்லை. நான் ஒரு ரஜினி ரசிகன், அவ்வளவுதான். குடும்பத்தை நடத்துவதற்கு ரிக்ஷா வண்டி ஓட்டிப் பிழைக்கிறேன். எனக்குப் பெரிதாக எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அரசியல் கட்சியை ரஜினி தொடங்க வேண்டும் எனத் தொண்டர்கள் பேசுகிறார்கள். நான் அதைப் பெரிதாக நினைத்ததில்லை” என்றார் மாதவன்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity