திண்டிவனம்: கொள்கையை விட்டுக்கொடுத்து அதிமுகவுடன் கூட்டணி அமைத்தோம். எனினும், அதற்கான முறையான அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை என்று பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் கால் சீட்டு, அரை சீட்டு எனக் கொடுத்து கெஞ்ச வைத்துவிட்டார்கள் என்று குற்றம்சாட்டியுள்ள அன்புமணி, பாமகவின் தயவு மட்டும் அதிமுக கூட்டணிக்கு கிடைக்காமல் போயிருந்தால் அதிமுக இன்று ஆட்சியிலேயே இருந்திருக்காது என கடுமையாகச் சாடினார்.
அன்புமணியின் இந்த அதிரடி பேச்சு அரசியல் வட்டாரத்திலும் கூட்டணிக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
புத்தாண்டு தினத்தையொட்டி பாமக சிறப்புப் பொதுக்குழு கூட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூரில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், “தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது என்பது உண்மைதான். இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை.
“அதிமுக கூட்டணியில் மட்டும் பாமக சேராமல் இருந்திருந்தால் இன்றைக்கு அதிமுகவால் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கமுடியாது.
“நாம் கூட்டணிக்கு சென்றாலும் நமது கொள்கையில் எள்ளளவு கூட பின்வாங்கவில்லை. இனியும் பின்வாங்கப்போவதும் இல்லை.
“கூட்டணியே வேண்டாம் என்ற கொள்கையை விட்டுக்கொடுத்து நாம் கூட்டணிக்குச் சென்றோம். ஆனால் அதைக்கூட அங்கீகாரம் செய்யவில்லையே என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது.
“தமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட அதி முகவிற்கு விட்டுக்கொடுத்தோம். அவர்கள் ஆட்சியைப் பிடிக்க வேண்டும், ஆட்சியைத் தொடர வேண்டும் என்றதால்தான் விட்டுக் கொடுத்தோம்.
“உள்ளாட்சித் தேர்தலில் கட்சி யில் உழைப்பவர்களுக்கு ஏற்ற வகையில் கவுன்சிலர் பதவி கொடுங்கள் என்றுதான் நாங்கள் கேட்டோம்.
“ஆனால் குறைந்த அளவிலேயே கொடுத்துள்ளார்கள். ஆளும் கட்சி யின் தலைமை எங்களது கருத்து களை எல்லாம் ஏற்று, இனி வரும் காலங்களில் இப்பிரச்சினையைச் சரிசெய்ய வேண்டும் என்று எனது அன்பான வேண்டுகோளை வைக்கி றேன்,” என்று அவர் கூறினார்.