தன்னுடைய இரண்டு மனைவிகளும் உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சித் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதையடுத்து மாலையும் கழுத்துமாக மனைவிகளின் வெற்றியைக் கொண்டாடி வருகிறார் விவசாயி ஒருவர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள வழுவூர் - அகரம் கிராமத்தில் வசிப்பவர் விவசாயி தனசேகர். அவருக்கு செல்வி, காஞ்சனா என இரண்டு மனைவிகள்.
தனசேகரன் ஏற்கெனவே ஊராட்சி மன்றத் தலைவராக இருந்துள்ளார். அதேபோல, செல்வியும் ஏற்கெனவே வழுவூர் - அகரம் கிராம ஊராட்சியின் தலைவராக இருந்திருக்கிறார். அதனால் தற்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வழுவூர் - அகரம் கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு செல்வி போட்டியிட்டார்.
அதேபோல, காஞ்சனாவின் சொந்த ஊர் கோவில்குப்பம் சாத்தனூர். அங்கு இவருக்கு நல்ல செல்வாக்கு இருப்பதால் அங்கு ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.
ஏற்கனவே ஊராட்சி மன்ற தலைவராக இருந்ததால், தனசேகருக்கு வழுவூர் - அகரம், கோவில்குப்பம் சாத்தனூர் தொகுதிகளில் செல்வாக்கு அதிகம்.
இரண்டு கிராமங்களிலும் அதிரடியாக தேர்தல் வேலை செய்து இரு மனைவிகளுக்கும் வாக்கு சேகரித்தார் தனசேகர். வந்தவாசி ஒன்றியத்தில் கடந்த 30ஆம் தேதி தேர்தல் நடைபெற்று நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன.
இதில், தனசேகரனின் 2 மனைவிகளுமே அபார வெற்றி பெற்று தலைவிகளாகி உள்ளனர். பூரிப்பில் இருக்கும் தனசேகருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity