திருப்புவனம் அருகே முள்படுக்கையில் படுத்து பெண் சாமியார் ஒருவர் அருள்வாக்கு கூறினார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே லாடனேந்தலில் பூங்காவனம் முத்துமாரியம்மன் மற்றும் மாசாணி அம்மன் கோயில் உள்ளது.
இக்கோயிலை பெண் சாமியார் நாகராணி அம்மையார் என்பவரும் மாரிமுத்து சுவாமி என்பவரும் நிர்வகித்து வருகின்றனர்.
நாகராணி அம்மையார் ஆண்டுதோறும் 48 நாள் விரதமிருந்து மார்கழி மாத்ம் 18ம் தேதி முள்படுக்கையில் படுத்து தவமிருந்து பக்தர்களுக்கு அருள் வாக்கு சொல்வது வழக்கம்.
48வது நாளான நேற்று (ஜனவரி 3) கோயில் வாசலில் கருவைமுள், உடைமுள், இலந்தைமுள், கற்றாளை முள், சப்பாத்திக்கள்ளி உட்பட பல்வேறு வகையான முட்களால் 6 அடி உயரத்தில் 10 அடி அகலத்திற்கு படுக்கை அமைக்கப்பட்டது.
நாகராணி அம்மையார் கோயில் வளாகத்தில் உள்ள தெய்வங்களுக்கு சிறப்பு பூசைகள் செய்தார்.
பின்னர் பூசாரி மாரிமுத்து பூசைகள் செய்து பெண் சாமியார் நாகராணி அம்மையாரை முள்படுக்கைக்கு அழைத்து வந்தார்.
முள்படுக்கையில் ஏறி நின்றபடி அருள்வந்து ஆடிய பெண் சாமியார், பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார்.
சற்று நேரத்தில் மயங்கிய அவர், மூன்று மணி நேரம் முள் படுக்கையில் படுத்திருந்தார்.
இதனைக் காண சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், திண்டுக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity