சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் ஆளும்கட்சியைக் காட்டிலும் எதிர்க்கட்சிகள் அதிகளவில் வெற்றி பெற்றுள்ளது இதுவே முதல்முறை என தேர்தல் ஆணைய வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலை பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியுடன் அதிமுக எதிர்கொண்டது. அதேபோல் எதிர்க்கட்சியான திமுகவும் முன்னைய தேர்தலில் தான் அமைத்த அதே கூட்டணியுடன் இந்த தேர்தலை சந்தித்தது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு மட்டும் நடந்துள்ள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டன.
இதில் திமுக 14 மாவட்டங்களிலும் அதிமுக 13 மாவட்டங்களிலும் முன்னிலை வகித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த முடிவுகள் அதிமுக, திமுக இரு கட்சிகளுமே அதன் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து சம பலத்துடன் வெற்றிபெற்றுள்ளதாகவும் தமிழக உள்ளாட்சித் தேர்தல் வரலாற்றில் எதிர்க்கட்சிகள் இந்த அளவிற்கு வெற்றிபெறுவது இதுவே முதல்முறை எனவும் தேர்தல் ஆணைய வட்டாரம் கூறி யுள்ளது.
மாநில தேர்தல் ஆணையத்தால் 1996ல் முதல்முறையாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து 2001, 2006, 2011ம் ஆண்டுகளில் இந்த தேர்தல்கள் ஆணையத்தால் நடத்தப்பட்டன.
அதற்குமுன் தமிழக அரசால் இத்தேர்தல் நடத்தப்பட்டது.
வழக்கமாக உள்ளாட்சித் தேர்த லில் எந்தக் கட்சி ஆட்சி நடத்தி வருகிறதோ அந்தக் கட்சிதான் அதிக இடங்களில் வெற்றிபெறும்.
அவ்வகையில்தான் திமுக, அதிமுக ஆட்சியின்போது அந்தந்த கட்சிகள் வெற்றிபெற்றுள்ளன.
கடந்த 2011ல் தனித்து போட்டி யிட்டு 70%க்கும் அதிகமான பதவிகளை அதிமுக கைப்பற்றியது.
இந்நிலையில் இதுவரையில் இல்லாத அளவில் இந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவும் அதிக இடங்களைப் பிடித்துள்ளது.
தமிழகத்தில் 2011ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாஜக, இரண்டு மாவட்ட ஊராட்சி வார்டுகளிலும் 29 ஊராட்சி ஒன்றிய வார்டுகளிலும் வெற்றிபெற்றது. இம்முறை அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு ஆறு மாவட்ட ஊராட்சி வார்டுகளிலும் 87 ஊராட்சி ஒன்றிய வார்டுகளிலும் வெற்றிபெற்றுள்ளது.
இதற்கிடையே, நகர்ப்புறத்திற்கும் தேர்தல் நடத்தியிருந்தால் ஊரக உள்ளாட்சித் தேர்தலைப் போன்றே திமுக மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கும் என்று திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
“நகர்ப்புற ஊராட்சி அமைப்புகளுக்கும் தேர்தலைச் சேர்த்து நடத்தி இருந்தால் திமுக இன்னும் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கும். இன்னும் முழுமையான முடிவுகள் வராத நிலையில், இதுவரை வெளியான முடிவுகளில் பெரும்பான்மை வெற்றியை திமுக கூட்டணிக்குத் தமிழக வாக்காளர்கள் கொடுத்துள்ளனர்,” என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.
94 இடங்களில் அமமுக வெற்றி
சென்னை: தமிழகத்தில் இரு கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியான போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 94 ஒன்றிய குழு உறுப்பினர் பதவி இடங்களை கைப்பற்றி இருந்தது.
உள்ளாட்சித் தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக எந்த கட்சி யுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிட்டது.
நாடாளுமன்றத் தேர்தல், 22 சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அமமுக தோல்வி அடைந்தது. இந்நிலையில் உள் ளாட்சித் தேர்தலுக்காக டிடிவி தினகரன் தீவிர பிரசாரம் செய்தார்.
அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 14 இடங்களிலும் கயத்தாறு ஒன்றியத்தில் 11 வார்டுகளையும் அமமுக கைப்பற்றி உள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.