புதுடெல்லி: மாநிலங்களவையில் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்னும் பாரதிய ஜனதா கட்சியின் கனவு இந்த ஆண்டு பலிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.
காரணம், இந்த ஆண்டில் நாடு முழுக்க பல மாநிலங்களில் 73 மாநிலங்களவை உறுப்பினர்களுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. இவற்றில் பெரும்பான்மை இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கே கிடைக்கும் நிலை உள்ளது.
250 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் ஆளும் பாஜகவுக்கு 83 உறுப்பினர்களும் காங்கிரஸ் கட்சிக்கு 46 உறுப்பினர்களும் உள்ளனர். இவர்களில், பாஜகவைச் சேர்ந்த 18 பேர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 17 பேர் உள்பட 69 பேரின் பதவிக்காலம் இந்த ஆண்டில் முடிவடையவுள்ளது.
இதுதவிர ஏற்கெனவே 4 இடங்கள் காலியாக உள்ளதால் இந்த ஆண்டில் மாநிலங்களவைக்கு மொத்தம் 73 பேர் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
தமிழகத்தில் பதவிக் காலத்தை நிறைவுசெய்வோரில் அதிமுகவின் சசிகலா புஷ்பா, செல்வராஜ், விஜிலா சத்யானந்த், முத்துக்கருப்பன் ஆகியோரும் திமுகவின் திருச்சி சிவாவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.கே. ரங்கராஜனும் அடங்குவர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் புரி, ராம்தாஸ் அத்வாலே உள்ளிட்டோரின் பதவிக்காலமும் இந்த ஆண்டு முடிவடைய உள்ளது.
கடந்த சில மாதங்களில் பல்வேறு மாநிலங்களுக்கு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக தோல்வியைச் சந்தித்தது. ஆகக் கடைசியாக ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சி தோல்வியைத் தழுவியது.
மேலும் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் ஆட்சியைப் பறி
கொடுத்துவிட்டது பாஜக.
சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடியே மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பர். அந்த வகையில் இவ்வாண்டு நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் கை ஓங்கும் என்ற நிலை உள்ளது.