பூந்தமல்லி: கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்கள் மூலம் பொய்ச் செய்திகள் பரவி வருவதாக பலரும் புகார் கூறிவந்த நிலையில் இப்போது வாட்ஸ் அப் செயலி மூலம் கஞ்சா போதைப் பொருளை விற்பனை செய்துள்ளனர்.
இந்த போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட மூன்று கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை வடபழனியில் கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் பேரில், வடபழனி 100 அடி சாலை யில் சந்தேகப்படும்படியாக நின்ற ஒரு வாலிபரை போலிசார் பிடித்து விசாரித்தனர்.
முன்னுக்குப்பின் முரணாகப் பேசிய அவரிடம் வெளிநாட்டு போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின்பேரில் ராமாபுரத்தை சேர்ந்த விஷால்குமார், 22, வருண்குமார், 20, அரீஸ், 21, ஆகிய மூவரை போலிசார் கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் மூவரும் கல்லூரி மாணவர்கள் என்பதும் இவர்கள் நெதர்லாந்தில் இருந்து இணையம் வழி போதைப் பொருட்களை வாங்கி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து ‘வாட்ஸ்-அப்’பில் ஒரு குழுவை உருவாக்கி, ஒரு கிராம் போதைப் பொருள் ரூ.3,000க்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்
தேனி: தேனி மாவட்டம், பெரிய குளம் தென்கரை காவல்நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். கைலாசபட்டியில் கஞ்சா விற்பனை தொடர்பாக மனோஜ் என்பவர் காவல்நிலை யத்தில் புகார் கொடுத்தார். அவரது வீட்டையும் வீட்டின்முன்பு நிறுத்தியிருந்த வாகனத்தையும் கஞ்சா விற்பவர்கள் சேதப்படுத்தினர். கஞ்சா விற்று வரும் ஜெயபால், அவரின் மகன் நந்தா குறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கூறி கிராமமக்கள் கூறுகின்றனர்.