நாமக்கல்: தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 4,204 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வேலை செய்யாத ஆட்களுக்கு சம்பளம் தரப்பட்டுள்ளது, வாங்காத பொருட்களை வாங்கியதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது பெரும் வேதனையைத் தருவதாக புகார் மனுவை அளித்துள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்களைக் கொண்டு நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் 10 ரூபாய் இயக்கத்தினர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
இந்த மனுவில், "100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் பணிக்கு வராத பல பேரையும் பணிக்கு வந்ததாக கணக்கு காட்டி மோசடி நடந்துள்ளது.
"பல வேலைகளையும் இயந்திரங்கள் மூலம் செய்து விட்டு மனிதர்களைக் கொண்டு செய்ததாக கணக்கு காட்டியுள்ளனர். அத்துடன் இல்லாத நிறுவனங்களின் பெயரில் பொருட்களை வாங்கியதாக போலி ரசீதுகள் தயாரித்து நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இவற்றையெல்லாம் வசூல் செய்வதோடு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்," என்று வலியுறுத்தி உள்ளனர்.

