காவல் நிலையத்தில் திருமணம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், வளைகாப்பு?
அதையும் நடத்திவைத்து 9 மாத கர்ப்பிணியான பெண் காவலரை நெகிழச் செய்துள்ளது தேனாம்பேட்டை இ-3 காவல் நிலையம்.
அங்கு குற்றப்பிரிவில் காவலராகப் பணிபுரியும் கலையரசி என்பவருக்கு நேற்று (ஜனவரி 8) காவல் நிலையத்திலேயே வளைகாப்பு நடத்தப்பட்டது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கலையரசி. உறவினர்கள் யாரும் சென்னையில் இல்லாத நிலையில் அவருக்கு வளைகாப்பு நடத்தப்படவில்லை என்று கூறப்பட்டது.
இன்று முதல் அவர் பிரசவ விடுப்பில் ஊருக்குச் செல்வதால் நிலைய காவலர்கள் ஒன்று சேர்ந்து நேற்றே கலையரசிக்கு வளைகாப்பு நடத்தினர்.
வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்திய தேனாம்பேட்டை சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் எம்.சி.ரமேஷ், “அந்தப் பெண் காவலருக்கு உறவினர்கள் யாரும் சென்னையில் இல்லை. `நீங்க எல்லோரும் சேர்ந்து எனக்கு வளைகாப்பு நடத்துறீங்களா?’ என எங்களிடம் கேட்டார்,” என்று தெரிவித்ததாக விகடன் செய்தி இணையப்பக்கம் தெரிவித்தது.
“உடனடியாகக் களத்தில் இறங்கி, பூ மாலை பழங்களை வாங்கினோம். இறுக்கமான பணிச்சூழலுக்கு மத்தியில், இப்படியொரு மகிழ்ச்சியான நிகழ்வு எங்கள் காவல்நிலையத்தில் நடந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார் திரு ரமேஷ்.
தேனாம்பேட்டை காவல்நிலையத்துக்கு புகாரளிக்க வந்திருந்தவர்களும் காவலர் கலையரசியை வாழ்த்தி மகிழ்ந்தார்கள்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity