சென்னை: காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அவரை சிலர் திட்டமிட்டுக் கொலை செய்த அதிர்ச்சித் தகவல் தெரியவந்து உள்ளது.
கடந்த 8ஆம் தேதியன்று கன்னியாகுமரி களியாக்காவிளை பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் பணியில் இருந்தார் வில்சன்.
அப்போது அங்கு வந்த கொலையாளிகள் அவரை துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்தனர்.
குற்றவாளிகள் வில்சனின் உடல் முழுவதும் ஆங்காங்கே கத்தியால் குத்தி அவரைக் கொடூரமாகக் கொன்றுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே இது திட்டமிட்ட செய்யப்பட்ட படுகொலை எனப் போலிசார் சந்தேகித்தனர். இதையடுத்து தீவிர விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில், குற்றவாளிகள் கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் இந்தக் கொலைக்கான திட்டத்தைத் தீட்டியதாக அம்மாநில போலிசார் தெரிவித்துள்ளனர்.
கொலை நிகழ்ந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தபோது, அதில் இரண்டு நபர்களின் நடமாட்டம் பதிவாகி இருந்தது. அவர்கள் இருவரும் தவுபீக், அப்துல் சமீம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவரும் தீவிரவாதிகள் என்றும் கூறப்படுகிறது. அவர்கள் இருவருக்கும் வலைவீசப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் குற்றவாளிகள் திருவனந்தபுரம் நெய்யாற்றங்கரை பகுதியில் தங்கியிருந்ததாகவும், அங்கிருந்து ஆட்டோவில் வந்து கொலை செய்துவிட்டு தப்பியோடியதாகவும் போலிஸ் தரப்பு தெரிவிக்கிறது.
குற்றவாளிகளுக்கு வாடகை அடிப்படையில் ஆட்டோவைக் கொடுத்தவரிடம் விசாரணை நீடித்து வரும் நிலையில், இந்தப் படுகொலை சம்பவம் தொடர்பாக கேரளாவில் 6 சந்தேக நபர்களை போலிசார் தடுத்து வைத்தனர். பின்னர் அவர்கள் தமிழகத்துக்கு அழைத்து வரப்பட்டதாகவும், ஆறு பேரிடமும் தீவிர விசாரணை நடப்பதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக, கேரளாவின் கொல்லம் அருகே தென்மலை என்ற இடத்தில் தங்கியிருந்தபோது இவர்களைப் போலிசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
இவர்களுக்கு வில்சனை கொன்ற தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
சந்தேக நபர்களின் கைத்தொலைபேசி எண்களை வைத்து அவர்களின் இருப்பிடத்தைப் போலிசார் கண்டுபிடித்ததாகத் தெரிகிறது.
அப்துல் சமீம், தவுபீக் ஆகியோரை தேடப்படும் குற்றவாளிகள் என அறிவித்துள்ள போலிசார், அவர்களுடைய புகைப்படத்துடன் கூடிய சுவரொட்டிகளை விமான, ரயில், பேருந்து நிலையங்களில் ஒட்டி தேடி வருகின்றனர்.
இருவரையும் பற்றி தகவல் கொடுப்போருக்கு தமிழக அரசு ரூ.7 லட்சம் சன்மானம் அறிவித்துள்ளது. கேரள அரசு ரூ.5 லட்சம் பரிசு தருவதாக கூறி உள்ளது.
இதற்கிடையே களியக்காவிளையை அடுத்த கேரள எல்லையான பாறசாலையில் உள்ள புன்னகாட்டுவிளை பகுதியைச் சேர்ந்த கணினி நிபுணர் ஒருவரையும் போலிசார் சந்தேக வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். அவரது வீட்டில் போலிசார் கடந்த வாரம் சோதனை நடத்தினர்.
தீவிரவாத தொடர்பு குறித்தும் அவரிடம் விசாரணை நடந்து வந்த நிலையில், அவர் வில்சன் கொலை செய்யப்படுவதற்கு முந்தைய நாள் தலைமறைவாகி விட்டார். அவருக்கும் வலைவீசப்பட்டுள்ளது.
சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன், காவல்துறையில் 36 ஆண்டு காலம் பணியாற்றியுள்ளார். அவரது குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கியுள்ளது.
இதற்கிடையே வில்சன் படுகொலையைக் கண்டித்து நேற்று நாகர்கோவிலில் இந்து அமைப்பினர் மௌன ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.
வில்சன் குடும்பத்தாருக்கு உரிய பாதுகாப்பும் நிவாரணமும் வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
வில்சன் படுகொலைச் சம்பவம் காரணமாக குமரி, நாகர்கோவிலில் பரபரப்பு நீடித்து வருகிறது.