மதுரை: பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெற உள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளை எந்தவித பிரச்சினைகளும் இன்றி நடத்த ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
இந்தக் குழுவுக்கு ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையேற்பார். மேலும், மதுரை மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் உறுப்பினர்களாகச் செயல்படுவர்.
பொங்கல் திருநாளைக் கொண்டாடும் விதமாக மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கமாக உள்ளது. அவனியாபுரத்தில் ஆண்டுதோறும் தை முதல் நாளன்று ஜல்லிக்கட்டு நடைபெறும்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு விழாக் குழு மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக பலர் நீதிமன்றத்தை அணுகினர். இது தொடர்பான மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றக் கிளை, ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இதே போல் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிகட்டுகளையும் மாவட்ட ஆட்சியர், தென்மண்டல காவல்துறை தலைவர், ஊராட்சி மன்ற உதவி இயக்குநர் கண்காணிப்பின் கீழ் நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு டோக்கன் வழங்க லஞ்சம் பெறப்படுவதாக குற்றம்சாட்டி காளை உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இது குறித்து விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.