சென்னை: தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கைத் தமிழர்களை இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தில் சேர்க்காததன் மூலம் அவர்களை இலங்கைக்கு திரும்ப அழைத்து கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வரான விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அண்மைய பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈழத்தில் வசிக்கும் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதாக கவலை தெரிவித்துள்ள அவர், தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கைத் தமிழர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும், தங்களுடன் வசிக்க வேண்டும் என விரும்புவதாகக் கூறியுள்ளார்.
“கடந்த 35 ஆண்டுகளுக்குள் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள், சூழ்நிலை காரணமாக உலகம் முழுவதும் சென்று வசித்து வருகிறார்கள்.
“தென்னிந்தியாவில் சுமார் ஒரு லட்சம் ஈழத் தமிழர்கள் உள்ளனர். இவர்களாவது தற்போது தாயகம் திரும்பினால், எங்களுக்கு குறைந்து கொண்டே வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து கொள்ள முடியும்,” என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழர்களுக்கான வாழ்வாதாரம், பாதுகாப்பை உறுதி செய்து விட்டால், நிச்சயம் அகதிகளாக உள்ள பெரும்பாலான ஈழத்தமிழர்கள் தாயகம் திரும்புவர் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள அவர், தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கும்பட்சத்தில், எஞ்சி இருக்கும் தமிழர்களின் சொத்துகள் மற்றும் நிலங்களையாவது சிங்களவர் வசம் செல்லாமல் தடுத்து நிறுத்த முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே சென்னையில் நடிகர் ரஜினியையும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனையும் சந்தித்தார் விக்னேஸ்வரன். அச்சமயம் இலங்கைக்கு வருமாறு ரஜினிக்கு அவர் அழைப்பு விடுத்ததாகக் கூறப்படுகிறது.