சென்னை: விவசாயிகளைக் கௌரவிக்கும் விதமாக எருதுகள் பூட்டி நிலத்தில் ஏர் உழுவது போன்ற வடிவில் மாணவ, மாணவிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் நின்றனர். இது உலக சாதனையாகக் கருதப்படுகிறது.
சென்னையில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் நேற்று முன்தினம் இந்த உலக சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்வைப் பதிவு செய்வதற்கென சாதனைப் புத்தகங்கள் வெளியிடும் அமைப்பைச் சேர்ந்த பார்வையாளர்களும் வந்திருந்தனர்.
ஏர் உழும் உழவன் போன்ற அமைப்பில் மாணவர்களும் பொதுமக்களும் கச்சிதமாக நின்றதை பார்வையாளர்கள் கண்டு ரசித்து, கைத்தட்டி மகிழ்ந்தனர். நிகழ்வின் முடிவில் சாதனை புரிந்த விவசாயிகளுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெற்ற இந்நிகழ்வில் பறை இசை, பரதம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். படம்: ஊடகம்