சேலம்: தமது கைது நடவடிக்கையை தொல்லை என்று விமர்சித்துள்ளார் இலக்கியவாதியும் பேச்சாளருமான நெல்லை கண்ணன்.
நெல்லைத் தமிழின் எல்லையை சிலர் அறியவில்லை என்றும் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார்.
அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவர் குறித்து தரக்குறைவாகப் பேசியதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், நெல்லை கண்ணனுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது.
நீதிமன்ற உத்தரவின்படி, தினமும் மேலப்பாளையம் காவல்நிலையத்தில் காலையும் மாலையும் என இருவேளை முன்னிலையாகி கையெழுத்திட்டு வருகிறார்.
நேற்று முன்தினம் கையெழுத்திட்ட பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், நெல்லைத் தமிழின் எல்லை அறியாதவர்களால் தமக்கு இத்தகைய தொல்லை ஏற்பட்டுள்ளது என்றார்.
பாஜகவினரை மறைமுகமாகக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.