திருவனந்தபுரம்: இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கேரள அரசு ஹரிவராசனம் விருது வழங்கி கௌரவித்துள்ளது.
சபரிமலை ஆலய நிர்வாகமும் கேரள மாநில அரசும் இணைந்து ஆண்டுதோறும் சிறந்த இசைக்கலைஞர்களுக்கு ஹரிவராசனம் விருது வழங்கி வருகிறது. சபரி மலை சன்னிதானத்தில் உள்ள அரங்கில் நேற்று ஜனவரி 15ஆம் தேதி இந்த ஆண்டுக்கான விருது வழங்கப்பட்டது. விருதுடன் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் ‘Worshipful Music Genius’ என்ற பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.
மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்காக அதிக பங்களிப்பு அளித்தவர்களுக்கு ஹரிவராசனம் விருதை கேரளா அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது.
கடந்த 2019-க்கான ஹரிவராசனம் விருதை பாடகி பி.சுசிலாவுக்கு வழங்கப்பட்டது. பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே.ஜேசுதாஸ், கே.எஸ்.சித்ரா உள்ளிட்டோருக்கும் ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு ‘வணக்கத்துக்குரிய இசைஞானி’ என்ற பட்டமும் வழங்கப்பட்டது.