குமரி: தங்களது இயக்கத்தினரை என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து கைது செய்து வருவதால் அதனால் எரிச்சலுற்ற தாங்கள் பழிக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக போலிஸ் அதிகாரி வில்சனை சுட்டுக்கொன்றதாக கைதான இரு பயங்கரவாதிகளும் வாக்குமூலம் அளித்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
குமரி மாவட்டம், களியக் காவிளை சோதனைச் சாவடி யில் பணிபுரிந்துகொண்டிருந்த போலிஸ் அதிகாரி வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக கர்நாடகாவில் அப்துல் சமீம், தவ்பீக் ஆகிய இருவ ரும் கைதாகினர்.
இந்நிலையில், கர்நாடக போலிசார் குற்றவாளிகளை விசாரணை செய்வதற்காக குமரி மாவட்ட போலிசாரிடம் ஒப்படைத்தனர். இவர்கள் நேற்று குழித்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதற்கிடையே தக்கலையில் உள்ள ஏஎஸ்பி அலுவலகத்தில் அப்துல் சமீம், தவ்பீக் இருவரையும் தமிழக கியூ பிரிவு போலிசார் தனித்தனியாக விசாரித்தனர். அப்போது அவர்கள் அளித்த வாக்குமூலம் பற்றி போலிசார் தெரிவித்துள்ளனர்.
இருவரும் தமிழ்நாடு நேஷனல் லீக் இயக்கத்தைச்சேர்ந்தவர்கள் என்றும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் நேரடி தொடர்பு வைத்திருந்ததாகவும் கூறியதாக சொல்லப்படுகிறது.
கியூ பிரிவு போலிசார் தொடர்ந்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டதால் அவர்களுக்கு பாடம் புகட்டத் திட்டமிட்டதாகவும் இதற்காகவே பணியில் இருந்த வில்சனை சுட்டுக்கொன்றதாகவும் கியூ பிரிவு போலிசாரிடம் அப்துல் சமீமும் தவ்பீக்கும் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.
மேலும் தங்களது இயக்கத்தினர் மற்றும் அல்உம்மா, ஐஎஸ்ஐஎஸ் போன்ற அமைப்புகளை சேர்ந்த பலரையும் தேசிய புலனாய்வு துறை கைது செய்து வருவதால், எஸ் எஸ் ஐ யை சுட்டுகொன்றோம் என்று கூறியுள்ளதாக போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரளாவில் இருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 25 பேர் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்தனர். இவர்களை கேரளாவின் மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் இருந்து சிலர் அழைத்துச் சென்றனர். அவர்களில் சிலருடன் அப்துல் சமீம், தவுபீக்குக்கு தொடர்பு இருந்துள்ளது.
ஐஎஸ் அமைப்பில் மேலும் பலரை சேர்க்க இவர்கள் முயற்சி மேற்கொண்டனர். இதற்காக கேரளாவில் ஆள் சேர்க்கும் பணியிலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில்தான் தமிழக கியூ பிரிவு போலிசார் டெல்லியில் காஜா மொய்தீன், செய்யது அலி நவாஷ், மெகபூப் பாஷா ஆகியோரை கைது செய்தனர். ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருந்ததால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
டெல்லியில் கைதான செய்யது அலி நவாஷ் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர், கைது செய்யப் பட்டது அப்துல் சமீம், தவுபீக்குக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.