கோவை: தமிழ்நாட்டின் தொழில் நகரம் என்று வர்ணிக்கப்படும் கோயம்புத்தூர் வீதிகளை மிகவும் துப்புரவாக வைத்திருக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து அந்த நகர மாநகராட்சி நிர்வாகம் முயற்சிகளை எடுத்து வருகிறது.
இருந்தாலும் இந்த முயற்சிகளில் அந்த நிர்வாகம் தோல்வி அடைந்துவிட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் நகரை தூய்மைப்படுத்தும் முயற்சியில் கடவுளின் உதவியை நாடி இருக்கிறார்கள்.
சாலை ஓரங்களில் பல இடங்களையும் பூசி மெழுகி தூய்மைப்படுத்தி அந்த இடங்களில் எல்லாம் துப்புரவுத் துறை ஊழியர்கள் கடவுளின் படங்களை வைத்து இருக்கிறார்கள்.கோலங்களைப் போட்டு இருக்கிறார்கள். இப்படிச் செய்தால் அந்த இடங்களில் குப்பைகூளங்களைப் போட்டு மக்கள் அசிங்கப்படுத்தமாட்டார்கள் என்று மாநகர நிர்வாகம் நம்புகிறது.
“குப்பைத் தொட்டிகள் இல்லாத கோயம்புத்தூர் நகரைச் சாதிக்க வேண்டும் என்பதே இந்த மாநகராட்சியின் இலக்கு.
“ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்கள் வீட்டில் சேரும் குப்பைகளை அன்றாடம் வீதி வழியாக வரும் துப்புரவு ஊழியரிடம் நேரடியாக ஒப்படைத்துவிட வேண்டும்.
“இப்படிச் செய்வதற்குப் பதிலாக சிலர் சாலை ஓரங்களில் குப்பைக்கூளங்களைப் போட்டுவிட்டுப் போய்விடுகிறார்கள். சிலர் வேறு வழிகளில் அசுத்தப்படுத்துகிறார்கள்.
“இப்போது நாங்கள் சாலை ஓர இடங்களில் கடவுளின் படத்தை வைத்து அத்தகைய இடங்களை புனிதமான இடங்களாக ஆக்கிஇருக்கிறோம்.
‘இந்தத் திட்டம் நல்ல விரும்பிய பலனை அளிக்கத் தொடங்கி இருக்கிறது,” என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.