சென்னை: துக்ளக் விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், முரசொலி வைத்திருந்தால் திமுககாரன் என்பார்கள். துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள் என்று கூறியிருந்தார்.
இதற்கு முரசொலி தலையங்கம் வழியாக பதிலளித்துள்ளது.
துக்ளக் இதழின் 50வது ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு கலந்துகொண்டு துக்ளக் 50வது ஆண்டு விழா மலரை வெளியிட்டார்.
முதல் பிரதியை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களாக பாஜக மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், தமாகா தலைவர் ஜி.கே வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “மக்களுக்கு சேவை செய்வது என்பது தந்தைக்குரிய பதவி. அந்த மாபெரும் சேவையை சோவை தொடர்ந்து துக்ளக் இதழை சிறப்பாக கொண்டு செல்கிறார் குருமூர்த்தி. சோ ஒரு மிகச்சிறந்த அறிவாளி. அவர் அறிவாளி என்பதை நிரூபிக்க தேர்ந்தெடுத்த துறை பத்திரிக்கை துறை. அதில் அவர் எடுத்த ஆயுதம் துக்ளக்,” என்றார்.
மேலும் பேசிய அவர், முரசொலி வைத்திருந்தால் திமுககாரன் என்பார்கள். துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள். தற்போதைய சூழலில் காலம், அரசியல், சமுதாயம் மிகவும் கெட்டுப்போயுள்ளது. துக்ளக் சோவிற்கு பிறகு, இந்த துக்ளக் பத்திரிகை நடத்தப்படும் என இங்கு யாரும் எதிர்பார்க்கவில்லை,” என்று குறிப்பிட்டார்.
இந்த நிலையில் முரசொலி வைத்திருந்தால் தமிழன், மனிதன் என பொருள் என்று ரஜினிக்கு முரசொலி நாளிதழ் தலையங்கம் சுட்டிக் காட்டி உள்ளது.
“முரசொலி வைத்திருந்தால் தமிழன் என்று பொருள். அதுவும் திராவிட இயக்கத் தமிழன் என்று பொருள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற பேதமற்ற உன்னதக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டவன் என்று பொருள். எல்லோர்க்கும் எல்லாம் என்ற சமத்துவ எண்ணம் கொண்டவன் என்று பொருள். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த குடியின் இன்றைய குடிமக்கள் என்று பொருள். எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள், மெய்ப்பொருள் காண்பவன் என்று பொருள்.
முரசொலி வைத்திருந்தால் ஒடுக்கப்பட்ட சமூகத்தவன் என்று பொருள். தன்னை ஒடுக்கியவர் யாரென்று உணரத் தொடங்கிவிட்டவன் என்று பொருள். இனியும் ஒடுங்க மறுப்பவன் என்று பொருள். ஒடுக்கியவர் திமிர் ஒடுங்க ஒன்று சேர்ப்பவன் என்று பொருள்.
முரசொலி வைத்திருந்தால் வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்பவன் என்று பொருள். பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைந்தால் சங்காரம் நிஜமென்று சங்கே முழங்குபவன் என பொருள். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பவன் என்று பொருள்.
முரசொலி வைத்திருந்தால் தமிழ் காப்போன் என பொருள். தமிழர் நலன் காப்போன் என்று பொருள். தமிழ்நாடு காப்போன் என்று பொருள்.
வாழ்ந்த இனம், வீழ்ந்ததன் வரலாறும் வீழ்ந்த இனம் மீண்டும் வாழச் சரியான பாதையை தேர்ந்தெடுத்துவிட்டவன் என்று பொருள்,” என்று முரசொலி விளக்கமளித்தது.