அருப்புக்கோட்டை: தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டால் அந்தத் தேசிய கட்சி தனது கட்சி பெறும் அளவுக்குக்கூட வாக்குகளைப் பெறமுடியாது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
நெடுங்காலமாக சேர்ந்தே அரசியலைச் சந்தித்து வரும் திமுகவும் காங்கிரஸ் கட்சியும் இதுவரை இல்லாத அளவுக்கு இப்போது கசப்பு உணர்வை அனுபவித்து வருகின்றன என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்தக் கட்சிகள் பற்றி கருத்து கூறிய சீமான், காங்கிரஸ் கட்சி கடந்த 40 ஆண்டு காலமாக திராவிடக் கட்சிகளின் மீது சவாரி செய்தே தேர்தலைச் சந்தித்து வந்திருக்கிறது என்று குறிப்பிட்டார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்குத் தொடர்பில் கடந்த 28 ஆண்டு காலமாக ஏழு பேர் சிறையில் இருந்து வருகிறார்கள்.
அவர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் என்பவர் அதிகாரிகளின் அனுமதியுடன் வெளியே வந்து அருப்புக்கோட்டையில் தனது தாயுடன் தங்கி இருக்கிறார். அவரை சீமான் சந்தித்துப் பேசினார்.
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்து நின்ற நாம் தமிழர் கட்சி 10 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று இருக்கிறது என்பதை சீமான் சுட்டினார்.
காங்கிரஸ் தனித்து நின்றால் இந்த அளவுக்கு அந்தக் கட்சி வாக்குகளைப் பெற முடியாது என்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான் தெரிவித்தார்.
ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டு நாம் தமிழர் கட்சி மீண்டும் போராட்டம் நடத்தி அதில் வெற்றியடையும் என்றும் சீமான் உறுதிபடச் சொன்னார். அவர்களை விடுவிக்காமல் இருப்பது தவறு என்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் குறிப்பிட்டார்.