திருப்பத்தூர்: தமிழர்களின் பாரம்பரிய வீர விழா என்று வர்ணிக்கப்படும் ஜல்லிக்கட்டும் மஞ்சுவிரட்டும் மாநிலத்தின் பல பகுதிகளிலும் வீரத்தை வெளிப்படுத்தி உற்சாகப் புழுதியைக் கிளப்பிவிட்டு அனல் பறக்கும் அளவிற்கு நேற்று மிகவும் விறுவிறுப்பாகத் தொடர்ந்தன.
பொங்கல் பண்டிகையையொட்டி இம்மாதம் 15ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது.
அதையடுத்து முதல் நாளான பொங்கலன்று அவனியாபுரத்திலும் அடுத்த நாளன்று பாலமேட்டிலும் உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வெள்ளிக்கிழமையன்றும் வெகுசிறப்பாக வீரத்தை வெளிப்படுத்தி தமிழர்களின் பண்பாட்டை உலகிற்கு எடுத்துக்காட்டும் அளவில் நடந்தன.
அதனையடுத்து நேற்று திருச்சி, புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களில் மணப்பாறை, ராச்சாண்டார் திருமலை, வன்னியன்விடுதி உள்ளிட்ட பல இடங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தன. அவற்றில் சுமார் 2,000 காளைகளும் ஏராளமான வீரர்களும் பங்கேற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதேநேரத்தில் இதர பல இடங்களில் மஞ்சுவிரட்டும் நடந்தது.
திருப்பத்தூர் அருகே சிராவயல் மஞ்சுவிரட்டில் 1,000 காளைகள் பங்கேற்றதாகவும் அதில் சுமார் 90 பேர் காயம் அடைந்துவிட்டதாகவும் தகவல்கள் கூறின.
மஞ்சுவிரட்டையும் ஜல்லிக்கட்டையும் காண்பதற்கு வெளிநாட்டினர் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதால் பல இடங்களிலும் போக்குவரத்துத் தேக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
குறிப்பாக திருப்பத்தூர்-பிள்ளையார்பட்டி சாலைகளில் பல மணி நேரம் வாகனங்கள் செல்ல முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் நேற்று வரை நான்கு பேர் மாண்டுவிட்டதாகவும் நூற்றுக் கணக்கில் பலரும் காயம் அடைந்துவிட்டதாகவும் தகவல்கள் கூறின.
இந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அரசியல்வாதிகள், போலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் காளைகளும் களமிறங்கின.
வெற்றியாளர்களுக்கு கார், தங்கச் சங்கிலி உட்பட கோடி கணக்கான ரூபாய் மதிப்புள்ள பரிசுப்பொருட்கள் கிடைத்தன.
இதனிடையே, இந்த ஆண்டு போட்டிகளுக்கு மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டதாகவும் அமைச்சர்களும் அதிகாரிகளும் கூறினர்.