அலங்காநல்லூர்: ஜல்லிக்கட்டு வீரர்களுக்குத் தகுதி அடிப்படையில் அரசாங்க வேலை கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் உறுதி தெரிவித்து உள்ளார்.
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை நடந்தது. அந்தப் போட்டியைக் காண்பதற்காக அலங்காநல்லூர் சென்றிருந்த அமைச்சர் அங்கு செய்தியாளர்களிடம் பேசினார்.
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்கள், தகுதி அடிப்படையில் வேலைகளுக்கு விண்ணப்பிக்கும்போது அவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு ஏதுவாக நடவடிக்கைகள் இடம்பெறும் என்றும் இது பற்றி முதல்வர் முடிவெடுக்க ஆவன செய்யப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜல்லிக்கட்டு வீரர்களைச் சிறப்பிப்பதற்காக முதல்வர், துணை முதல்வர் பெயர்களில் வழங்கப்படும் பரிசுகளைச் சுட்டிக்காட்டிய அவர், ஜல்லிக்கட்டு மட்டுமின்றி தமிழர்களுடைய இதர வீர விளையாட்டுகளையும் கலை, கலாசாரங்களையும் அரசாங்கம் பாதுகாக்கும் என்றும் தெரிவித்தார்.
இதில் மேலும் ஒரு படியாக கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டுத் திறனை வளர்க்கவும் விளையாட்டுகளின் தரத்தை மேம்படுத்தவும் புதிய பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர், விளையாட்டுகளை இளைஞர்களுக்குப் பயிற்றுவிப்பதற்காக பயிற்சியாளர்கள் உருவாக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.