மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரின் உயிர் பிரிந்தது. அடுத்தடுத்து இறந்த தம்பதி லோகநாராயணன், ராஜேஸ்வரிக்கு அவர்களின் மகன்கள் ஒரே நேரத்தில் இறுதிச் சடங்கு செய்த சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டை, சஞ்சீவிராயன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் 65 வயது லோகநாராயணன். இவர் சென்னை மாநகராட்சியில் வரிவசூலிக்கும் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரின் மனைவி 62 வயது ராஜேஸ்வரி.
இவர்களுக்கு 3 மகன்கள், 2 மகள்கள். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. லோகநாராயணனும் ராஜேஸ்வரியும் தனியாக வசித்துவந்தனர்.
இந்த நிலையில், சில தினங்களுக்கு முன் ராஜேஸ்வரிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அதற்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மனைவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நாளிலிருந்து லோகநாராயணன் மனவேதனையடைந்து காணப்பட்டார்.
மனைவிக்கு உடல்நலம் குறைந்த பிறகு வீட்டு வேலைகளை லோகநாராயணன்தான் வீட்டு வேலைகளைச் செய்துவந்தார்.
சம்பவத்தன்று இவர்களின் வீட்டின் கதவு நீண்டநேரமாகியும் திறக்கப்படவில்லை. அதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் எட்டிப்பார்த்தபோது தம்பதியர் படுத்திருந்ததையும் அவர்களிடம் எந்த அசைவும் இல்லாமல் இருந்ததையும் பார்த்து அவர்களது பிள்ளைகளுக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
காலையில் கண்விழித்த லோகநாராயணன், வீட்டில் பால் காய்ச்சியிருந்தது பின்னர் தெரியவந்தது. முதலில் மனைவி இறந்திருக்கலாம் என்றும் பின்னர் லோகநாராயணன் இறந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
#தமிழ்முரசு #மனைவிகணவன் #லோகநாராயணன்ராஜேஸ்வரி