கள்ளக்குறிச்சி: அரக்கோணத்தைச் சேர்ந்த ஐசக் என்ற தொழிலதிபரின் காரை, அதன் பின்னால் வந்த ஒரு அரசுப் பேருந்து நேற்று காலை மோதியது.
இந்தச் சம்பவத்தால் நடந்த வாக்குவாதத்தின்போது சாலையில் நின்றிருந்தவர்கள் மீது மற்றொரு தனியார் பேருந்து மோதியதில் நால்வர் கொல்லப்பட்டனர். 20 பயணிகள் காயம் அடைந்தனர்.
அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தால் அந்தப் பகுதி யில் சிலமணி நேரம் வரை போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டம், அரக்கோணத் தைச் சேர்ந்த ஐசக் என்பவர் தனது குடும்பத்தினருடன் தூத்துக்குடியில் நடைபெற்ற ஒரு திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, மீண்டும் அரக்கோணத்திற்கு தனது காரில் திரும்பிக் கொண் டிருந்தார்.
அவரது கார் இறைஞ்சி என்ற இடத்தில் வந்துகொண்டிருந்த போது, அவரது காரின் பின்னால் வந்த அரசுப் பேருந்து ஐசக் கார் மீது மோதியுள்ளது. இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
எனினும் ஐசக் தனது காரை நிறுத்தி, அரசுப் பேருந்து ஓட்டுநரு டன் வாக்குவாதம் செய்துள்ளார்.
கைபேசியில் பேசியபடியே கவனக்குறைவாக பேருந்தை ஓட்டி வந்ததால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக ஓட்டுநருடன் ஐசக் வாக்குவாதம் செய்தார்.
இந்நிலையில் விபத்துக்குள்ளான காரும் அரசுப் பேருந்தும் சென்னை - திருச்சி நான்கு வழிச்சாலையில் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்ததால் அரசுப் பேருந்து பயணிகள் சிலரும் பேருந்தில் இருந்து கீழே இறங்கி சாலையில் நின்றுகொண்டிருந்தனர்.
இதற்கிடையே அந்த நேரத்தில் திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி வந்த ஒரு தனியார் சொகுசுப் பேருந்து, சாலையில் நின்றுகொண்டிருந்த பயணிகள் மீது மோதியதுடன் அரசுப் பேருந்தின் பின்பகுதியிலும் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் சாலையில் நின்றுகொண்டிருந்த ஐசக், அறந் தாங்கியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சற்குணம் ஆகிய மூவரும் அடையாளம் தெரியாத நபர் ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தில் உயிரழந்த நான்கு பேரின் உடல்களும் உடற்கூறு ஆய்வுக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்துக்குள்ளான வாகனங்களும் சாலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு பின்னர் போக்குவரத்து சரிசெய்யப்பட்டது. உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.