போதையில் மளமளவென்று கைபேசி கோபுரத்தின் மீது ஏறி உயர உயரச் சென்ற ஆடவரிடம் மது பாட்டிலைக் காட்டி, “இந்த சரக்கு உங்களுக்குத்தான், கீழே இறங்கி வாருங்கள்,” என்று ஆசை வார்த்தை கூறி அவரை பத்திரமாக மீட்டுள்ளனர். இந்தச் சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் நடந்துள்ளது.
போச்சம்பள்ளியை அடுத்த அரசம்பட்டி பூசாரி கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சேகர், 52.
கூலித் தொழிலாளியான இவர் அடிக்கடி மதுவுக்கு அடிமையாகி விடுவார். நேற்று மாலை வழக்கம்போல் அரசம்பட்டியில் உள்ள மதுபானக்கடையில் மது அருந்திய சேகர், அந்தக் கடைக்கு எதிரே இருந்த 100 அடி உயரம் கொண்ட கைபேசி கோபுரத்தின் மீது ஏறியுள்ளார்.
பொதுமக்கள் அவரை கீழே இறங்கும்படி சத்தமிட்டனர்.
எதையும் காதில் வாங்கிக்கொள்ளாத அவர் தொடர்ந்து மேலே மேலே ஏறினார்.
நேரம் செல்லச்செல்ல அவர் கீழே இறங்காததால் காவல் நிலையத்திற்கும் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் பறந்தது.
கோபுரத்தில் ஏறி பாதி தூரம் வரை சென்ற பாரூர் போலிஸ் அதிகாரி கபிலனால் சேகரை கீழே இறங்கவைக்க முடியாததால் அவர் கீழே இறங்கிவிட்டார்.
இந்நிலையில் அப்பகுதியில் கிராமமக்கள் திரண்டனர்.
கோபுர உச்சிக்குச் சென்ற சேகருக்கு தனது கால்சட்டைப் பாக்கெட்டில் மது வைத்திருப்பது நினைவுக்கு வர உச்சியில் நின்றபடியே அவர் மதுவை அருந்தினார்.
சேகரால் கீழே இறங்கமுடியாது என்பதை அறிந்த போலிசார் சேகரின் நண்பர் ஒருவரை கோபுரத்தின் மேல் ஏறுமாறு கூறினர். இருப்பினும் அவர் மேலே ஏறுவதற்குள் சேகர் குதித்து விடுவாரோ என்ற பயமும் இருந்தது.
இதனால் சேகரிடம் மதுவாங்கி வைத்திருப்பதாக ஆசை வார்த்தை கூறியபடியே மதுபாட்டிலை காட்டிய வாறு தீயணைப்பு வீரர்கள் மேலே ஏறினர். அப்போது சேகரும் கீழே இறங்கிவர தீயணைப்பு வீரர்களிடம் சேகர் சிக்கினார். சேகரின் கை, கால்களைக் கயிற்றால் கட்டி, தீயணைப்பு வீரர்கள் சேகரை பத்திரமாக மீட்டனர்.
#மது #கைபேசிகோபுரம் #தமிழ்முரசு