சென்னை: கடந்த சில தினங்களாக சென்னையில் நடைபெற்று வந்த புத்தகக் கண்காட்சி முடிவுக்கு வந்துள்ளது.
இந்தாண்டு சுமார் இருபது கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்றுத் தீர்ந்ததாக கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆண்டுதோறும் சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி வாசிப்பு பழக்கம் உள்ள அனைவரையும் கவர்ந்திழுக்கும் வண்ணம் இருக்கும். தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் வெளீயீட்டாளர்கள் சங்கம் (பபாசி) இந்தக் கண்காட்சியை அரசு ஆதரவுடன் நடத்தி வருகிறது.
இந்தாண்டும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை திரளாகக் கண்காட்சிக்கு வந்ததாகவும், பல்வேறு தலைப்புகளில் வெளிவந்துள்ள புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றதாகவும் பபாசி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
கடைசி நாளான நேற்று முன்தினம் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. இம்முறை செய்தியாளர் அன்பழகன் என்பவரது அரங்கை அப்புறப்படுத்துமாறு பபாசி உத்தரவிட்டதை அடுத்து சர்ச்சை வெடித்தது.
இந்த நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து, கண்காட்சித் திடலில் உரையாற்ற இருந்த நாடாளுமன்ற எம்பியும், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருமான வெங்கடேசன் நிகழ்ச்சியைப் புறக்கணித்து வெளியேறினார். மேலும் பலரும் இது தொடர்பாக கண்டனம் தெரிவித்திருந்தனர்.
படம்: ஊடகம்