சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் பேச்சில் குழப்பமும் முரண்பாடும் தெரிவதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
பெரியார் குறித்து தெரிவித்த கருத்துக்காக ரஜினி நிச்சயமாக உரிய நேரத்திலே வருத்தப்பட வேண்டிய நிலை வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
“தேவையில்லாமல் தம்மை காப்பாற்றிக்கொள்வதற்காக, குளிக்கப்போய் சேற்றை மீண்டும் பூசிக்கொள்கிறார் ரஜினி. தவறான தகவலை வெளியிட்ட இன்னொரு பத்திரிகையை தேடிக் கண்டு
பிடித்து கொண்டுவந்து பேசுகிறார். தவறான தகவலை ஆதாரமாக காட்டி பேசுவதும் தவறானது,” என்று வீரமணி குறிப்பிட்டுள்ளார்.
“துக்ளக் ஆசிரியர் ‘சோ’ ராமசாமியைப் பாராட்டி பேச வேண்டும் என்று சொன்னால், அதற்கு துக்ளக் பத்திரிகையைத்தானே சுட்டிக்காட்டி இருக்க வேண்டும். இன்னொரு பத்திரிகையில் வந்ததை சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. இதற்கு அவர் நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டியிருக்கும்,” என்று வீரமணி மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, நடிகர் ரஜினி பெரியாரின் கருத்துகளை முழுமையாக படித்து தெரிந்துகொண்டு பேச வேண்டும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தி உள்ளார். தம்மைப் போன்ற பலர் உயரிய நிலையை அடைய பெரியாரே காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.