சேலம்: எந்த காலத்திலும் திமுக தனது கூட்டணி கட்சிகளை மதித்தது கிடையாது என முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.
ஆனால் அதிமுகவில் ஒரு சாதாரண தொண்டன் கூட உயர்ந்த நிலைக்கு வர முடியும் என்றும், அதற்கு அடித்தளமிட்டவர் எம்ஜிஆர் என்றும் அவர் கூறியுள்ளார். சேலத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் பேசிய முதல்வர், அதிமுக ஆட்சி புரிந்த காலங்கள்தான் தமிழகத்திற்குப் பொற்காலம் என்றார்.
“அதிமுகவில் சாதாரண தொண்டனாக இருந்த நான் முதல்வராகி உள்ளேன். அதேபோல் என்னைப்போல் எத்தனையோ பழனிசாமிகள் அதிமுகவிலிருந்து முதல்வர் ஆக முடியும்.
“ஒரு காலத்தில் எப்படியோ இருந்த காங்கிரஸ் கட்சி, திமுகவோடு சேர்ந்து இப்படியாகிவிட்டது. இனி திமுகவில் இருந்து முக ஸ்டாலின் மட்டுமல்ல, உதயநிதி ஸ்டாலினால் கூட முதல்வராக முடியாது,” என்றார் முதல்வர் பழனிசாமி.
தற்போது வெளிவரும் திரைப்படங்களை பார்த்தால் குழந்தைகள் கெட்டுப்போகும் என்று குறிப்பிட்ட அவர், காலஞ்சென்ற முதல்வர் எம்ஜிஆர் தமது திரைப்படங்கள் மூலம் ஆக்கபூர்வமான கருத்துக்களை சமுதாயத்தில் புகுத்தியவர் என்றார். இப்போதெல்லாம் ஒரு படம் கூட மனதில் நிற்பதில்லை என்றும் முதல்வர் தெரிவித்தார்.