பெங்களூர்: கர்நாடக மாநிலம் மங்களூர் விமான நிலையத்தில் இரு நாட்களுக்கு முன் கேட்பாரற்றுக் கிடந்த மர்ம பையால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் அந்தப் பையைக் கைப்பற்றி அதில் உள்ள வெடிகுண்டுகளை வேறோர் இடத்திற்குக் கொண்டு சென்று பாதுகாப்பாக வெடிக்கச் செய்தனர்.
இந்த வெடிகுண்டு பையை வைத்தது யார் என்று காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அங்குள்ள கண்காணிப்புப் புகைப்படக் கருவிப் பதிவுகளின் அடிப்படையில் வெள்ளைத் தொப்பி அணிந்த ஒருவர் பையை வைத்துவிட்டு ஆட்டோவில் ஏறிச் செல்வது போன்ற காட்சிகள் இருந்ததையடுத்து அந்த ஆடவர் குறித்த புகைப்படங்களை வெளியிட்டுப் காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு பெங்களூரு அல்சூர் காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் தானாக முன்வந்து சரணடைந்து, போலிஸ் வெளியிட்ட புகைப்படத்தில் இருப்பவரை நான் தான் எனது ஆட்டோவில் ஏற்றிச் சென்றேன் என்றும் அவரிடம் மூன்று பைகள் இருந்ததாகவும் ஒன்றை மட்டும் விமான நிலையத்தில் வைத்துவிட்டுச் சென்றுள்ளதாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, நேற்று அதிகாலை, விமான நிலையத்தில் வெடிகுண்டுப் பையை விட்டுச் சென்றது நான்தான் என்று ஒருவர் பெங்களூரு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
இதையடுத்து அல்சூர் காவல்துறையினர் அந்த ஆளிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் பெயர் ஆதித்யா ராவ் என்பது தெரியவந்தது.
மேலும் ஆதித்யா ராவ் வைத்திருந்த மற்ற இரண்டு பைகளில் என்ன இருந்தது என்பது குறித்தும், அவருக்குப் பயங்கரவாத அமைப்பின் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் சதித்திட்டத்தை அரங்கேற்றியது ஏன் என்கிற கோணத்திலும் காவல்துறையினர் தொடர்ந்து ஆதித்யா ராவ்-ஐ ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
உடுப்பி, மணிப்பாலைச் சேர்ந்த ஆதித்யா ராவ் பெங்களூரில் உள்ள கெம்பே கவுடா அனைத்துலக விமான நிலையத்தையும், கடந்த 2018ம் ஆண்டில் மெஜஸ்டிக்கில் உள்ள சங்கோலி ராயண்ணா ரயில் நிலையத்தையும் தகர்க்கப்போவதாக மிரட்டல் விடுத்ததாகச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பொறியியல் மற்றும் எம்.பி.ஏ., பட்டதாரியான ஆதித்யா ராவ், கெம்பேகவுடா அனைத்துலக விமான நிலையத்தில் பாதுகாப்புக் காவலர் பதவிக்குத் தான் நியமிக்கப்படவில்லை என்ற கோபத்தில் இவ்வாறு செய்ததாகக் கூறினார். போலிசார் மேலும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.