சென்னை: உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலின் திருக்குட நன்னீராட்டு விழா பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி தமிழ், சமஸ்கிருதம் இரண்டு மொழிகளிலும் நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்து இருக்கிறார்.
தஞ்சையில் திராவிடக் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் பிரகதீஸ்வரர் கோயிலில் குடமுழுக்குக்குத் தேவையான ஏற்பாடுகளை பிரம்மாண்ட அளவில் இந்தத் துறை மேற்கொண்டு வருகிறது.
குடமுழுக்கைக் காண்பதற்கு ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழர்களின் கலை, அறிவியல், பண்பாடு உள்ளிட்ட பலவற்றையும் உலகுக்குப் பறைசாற்றும் ஆயிரம் ஆண்டு பழமையான இந்தக் கோயில் குடமுழுக்கை தமிழில்தான் நடத்தவேண்டும் என்று அரசியல் தலைவர்களும் தமிழ் ஆர்வலர்களும் சிவசித்தர்களும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
குடமுழுக்கைத் தமிழில்தான் நடத்த வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் வழக்குத் தொடுத்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள், இதற்கு பதிலளிக்கும்படி அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டனர். அந்த உத்தரவுக்கு இணங்க அறநிலையத் துறை ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது.
பிறகு அது பற்றி கூறிய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர், “தஞ்சை பெரிய கோயிலில் காலம் காலமாகவே தமிழ், சமஸ்கிருதம் இரு மொழிகளிலும் குடமுழுக்கு விழா நடந்துள்ளதாகவும் இம்முறையும் அதே வழமை தொடரும் என்றும் தெரிவித்தார்.
இதன் தொடர்பில் பல விவரங்களும் அடங்கிய அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் நீதிமன்றத்திடமும் தமிழக அரசிடமும் அது தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.