சீனாவிலிருந்து தமிழகத்துக்குத் திரும்பிய 51 பேர் மருத்துவக் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் விசித்திர ‘கொரோனா’ கிருமிக்கு 130க்கும் அதிகமானோர் பலியாகிவிட்டனர். 6,000க்கும் மேற்பட்டோர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சீனாவிலிருந்து தமிழகம் வந்துள்ள 51 பேர் மருத்துவக் கண்காணிப்பின் கீழ் இருப்பதாக தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விளக்கமளித்த தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநா் குழந்தைசாமி, “கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்று 51 பேரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவா்களுக்கு காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறி தென்படுகிறதா எனச் சோதிக்கப்பட்டது. எனவே அவா்களின் வீடுகளிலேயே கவனித்து வருகிறோம். ஒவ்வொரு நாளும் அவா்களின் வீடுகளுக்கு காலை, மாலையில் மருத்துவப் பணியாளா்கள் சென்று மருத்துவ சோதனை செய்கின்றனர். ஒருவர் மட்டும் 28 நாட்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார்,” என்றாா்.
வெளிநாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வரும் மருத்துவ பயணிகளுக்கும் மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூா், மதுரை ஆகிய விமான நிலையங்களில் மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதே சமயத்தில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஏறக்குறைய 450 போ் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே ‘கொரோனா’ கிருமி பாதிப்புக்கு சிறப்பு வார்டுகளை அமைக்குமாறு சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி மதுரை இராசாசி அரசு மருத்துவமனையிலும் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையிலும் கொரோனா கிருமித் தொற்று சிகிச்சைக்கு தனி அறை அமைக்கப்பட்டுள்ளது.
மதுரையில் எட்டு படுக்கைகளைக் கொண்ட சிறப்பு சிகிச்சை அறைக்கு இரண்டு நுரையீரல் சிகிச்சை பிரிவு மருத்துவர்கள், இரண்டு பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்கள், பொது மருத்துவர்கள், தாதியர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
மற்றொரு சூழ்நிலையில் சீனாவில் உள்ள இந்தியர்களுக்கு உதவ இந்திய துாதரகம் தயாராக உள்ளது என்று சீனாவில் உள்ள இந்திய துாதரகத்தின் துணை தலைமை அதிகாரி அக்கினோ விமல் கூறினார்.
தமிழக அரசுக்கு அனுப்பிய கடிதத்தில், ‘கொரோனா’ வைரஸ் பரவாமல் தடுக்க நகரை விட்டு வெளியேறவிடாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உணவு, எரிபொருள் கிடைப்பதை சீனா அரசு உறுதி செய்துள்ளது. ஹுபெய் மாநிலத்தில் உள்ள இந்தியர்களுடன் இந்திய துாதரக அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். இது தவிர இந்திய மாணவர்களுக்கு உதவ ‘வீசாட்’ என்ற இணையத்தள குழுவை உருவாக்கியிருக்கிறோம்,” என்று திரு அக்கினோ விமல் தெரிவித்துள்ளார்.
#வூஹான்இந்தியா #தமிழ்முரசு