சென்னை அயனாவரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்த 11 வயது சிறுமியை அந்த குடியிருப்பில் பணியாற்றிய மின்தூக்கி ஆபரேட்டர் உட்பட 17 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததன் தொடர்பிலான வழக்கில் இன்று (பிப்ரவரி 3) தண்டனை விதிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் பாபு என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டார்; தோட்டக்காரர் குணசேகரன் குற்றமற்றவர் என வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
அவர்கள் இருவரைத் தவிர மற்ற 15 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. போக்சோ நீதிமன்றத்தில் 11 மாதங்களாக நடந்த வழக்கில் 15 குற்றவாளிகளுக்கு தண்டனையை சென்னை மாவட்ட போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா தீர்ப்பளித்தார்
அதில் ரவிக்குமார், சுரேஷ், அபிஷேக், பழனி ஆகிய 4 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இவ்வழக்கில் மூன்றாவது குற்றவாளியான ராஜசேகருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் நான்காவது குற்றவாளியான எரால்பிராஸ்க்கு 7ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சுகுமாறன், முருகேசன், பரமசிவம், ஜெய்கணேஷ், தீனதயாளன், ராஜா, சூர்யா, ஜெயராமன், உமாபதி ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் கைதான குற்றவாளிகள் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருப்பதால் அவர்களுக்கு அபராதம் ஏதுமில்லை.
தொடர்புடைய செய்திகள்
சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள், நன்னடத்தை அடிப்படையில் வெளியே வரமுடியாது.
இந்த வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக ரமேஷ் நியமிக்கப்பட்டு, சிறப்பு நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்பு வழக்கு விசாரணை நடந்தது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி டிசம்பர் வரை 11 மாதங்கள் விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கு விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 7 சாட்சிகளும், 36 அரசு தரப்பு சாட்சிகளும் விசாரிக்கப்பட்டு, 120 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
15 பேரும் குற்றவாளிகள் என கடந்த சனிக்கிழமை தீர்ப்பளித்த நீதிமதி மஞ்சுளா, தண்டனை விவரங்களை இன்று வாசித்தார்.
#அயனாவரம்சிறுமி #தமிழ்முரசு


