தஞ்சை பெரிய கோவில் மகா குடமுழுக்கு விழா இன்று (பிப்ரவரி 5) சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி தஞ்சையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
உலக பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட தஞ்சை பெரிய கோவிலில் கடந்த 1997ஆம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. இதையடுத்து 23 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று மீண்டும் குடமுழுக்கு நடந்துள்ளது.
இந்நிகழ்வையொட்டி தஞ்சையில் 5,500 போலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பத்து காவல்துறை கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
குடமுழுக்கைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ரயில்கள், சிறப்புப் பேருந்துகள் மூலம் லட்சக்கணக்கானோர் தஞ்சையில் குவிந்தனர்.
இதனால் தஞ்சையில் திரும்பிய பக்கம் எல்லாம் பக்தர்களைக் காண முடிந்தது.
தமிழர்களின் கட்டடக் கலைக்குச் சான்றாக விளங்கும் தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கையொட்டி, கடந்த 27ஆம் தேதி பழைய கொடிமரம் அகற்றப்பட்டது.
பின்னர் 40 அடி உயர தேக்கு மரத்தில் புதிய கொடிமரம் தயார் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. மேலும், ராஜகோபுரம் மற்றும் ஏழு சன்னதிகளின் கலசங்களுக்கும் தங்கமுலாம் பூசப்பட்டது.
இதையடுத்து தஞ்சை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
உச்ச நிகழ்வாக, இன்று அதிகாலை 4.30 மணியளவில் குடமுழுக்கு பூசை தொடங்கியது. இதில் 335 சிவாச்சாரியார்கள், 80 ஓதுவார்கள் கலந்து கொண்டனர்.
காலை 9.30 மணியளவில், மேளதாளங்கள் இசைக்கப்பட, சிவாச்சாரியார்கள் பெருவுடையார் சன்னதியான 216 அடி உயர ராஜ கோபுரத்தின் மீது புனித நீருடன் ஏறி, வேத மந்திரங்கள் முழங்க, புனித நீரை ராஜ கோபுரகலசத்தில் ஊற்றி குடமுழுக்கு செய்தனர்.
அப்போது கோபுரத்தின் மீது கருடன் வட்டமிட்டதாகவும் அதனைக் கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்ததாகவும் கூறப்பட்டது
இதேபோல் மற்ற சன்னதி கோபுர கலசங்களுக்கும் புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு செய்யப்பட்டது.
#தஞ்சை#தஞ்சாவூர்#குடமுழுக்கு#கருடன்