நெல்லை: அம்பை அருகே தாதி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கின் தொடர்பில் இருவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடுமையான தீர்ப்புதான் அடுத்தடுத்து மற்ற மற்ற குற்றவாளிகளையும் இதுபோன்ற குற்றங்களைப் புரிவதற்கு அச்சப்பட வைக்கும் என்று மக்கள் பலரும் சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
தாதி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மாலை நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி இந்திராணி, குற்றம் சாட்டப்பட்ட வசந்தகுமார், ராஜேஷ் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
அரசு ஊழியரான தாதியின் வீட்டில் அத்துமீறி நுழைந்ததற்கு ஆயுள் தண்டனையும் கொலை செய்ததற்காக தூக்குத் தண்டனையும் பலாத்காரம் செய்ததற்காக 10 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்தார்.
இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நால்வரும் விடுதலை செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம், அம்பை அருகே உள்ள கல்லிடைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 50 வயது பெண் ஒருவர், மணிமுத்தாறு அரசு சுகாதார நிலையத்தில் தாதியாக வேலை செய்துவந்தார்.
இவரது மகன் கோவையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். தாதியின் கணவர் ஏற்கெனவே இறந்து விட்டதால் அவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
கடந்த 29-9-2008ஆம் தேதி யன்று இரவு தாதி வீட்டில் தனியாகத் தூங்கிக்கொண்டு இருந்தபோது அறுவர் கொண்ட கும்பல் வீட்டின் மாடி வழியே வீட்டிற்குள் புகுந்தது. தாதியின் வாயில் துணியைப் பொத்தி அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து, கழுத்தை கயிறால் இறுக்கி கொலைசெய்தனர். அத்துடன் வீட்டில் இருந்த 25 கிராம் தங்க நகைகளையும் கொள்ளையடித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர்.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக கல்லிடைக்குறிச்சி கார்த்திக், 21, அயன்சிங்கம்பட்டி மகேந்திரன், 24, வசந்தகுமார், 30, கல்லிடைக்குறிச்சி ராஜேஷ், 27, கன்னியாகுமரியைச் சேர்ந்த கணேசன், 51, தூத்துக்குடியைச் சேர்ந்த சின்னத்துரை, 27 ஆகிய ஆறு பேரை போலிசார் கைது செய்தனர்.
விசாரணையில் தாதியை நகைக்காக இவர்கள் பலாத்காரம் செய்து கொன்றது தெரியவந்தது.